சபிதா ஜெயகுமார்
'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் அதன் புதிய தலைவரை அறிவித்துள்ளது.
'லிஷா'வின் புதிய தலைவராக திரு ரெகுநாத் தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கத்தின் முதலாம் துணைத் தலைவராக திரு முனிசாமி ஓம் பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் துணைத் தலைவராக திருவாட்டி ராஜலக்ஷ்மி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு 'சிண்டா' அரங்கத்தில் 'லிஷா'வின் ஐந்தாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் புதிய தலைமைத்துவம் குறித்து அறிவிக்கப்பட்டது.
கௌரவச் செயலாளராக திரு ருத்திராபதி பார்த்தசாரதியும் துணை கௌரவச் செயலாளராக திரு வைரப்ப தேவர் ராமமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கௌரவப் பொருளாளராக திரு செல்வம் வரதப்பனும் துணை கெளரவப் பொருளாளராக திரு ஷேக் ஃபக்ருதீனும் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிர்வாகக் குழுவிற்கு எட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்று ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
'லிஷா' உறுப்பினர்களில் மேலும் ஆறு பேர், நிர்வாகக் குழுவில் இணைவதற்கு சங்கத்தால் தேர்வு செய்யப்படுவர்.
புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகத்தின் முதல் செயற்குழுக் கூட்டத்திற்குள் அந்த ஆறு பேரும் தெரிவுசெய்யப்படுவர் என்று சங்கம் கூறியது.
'லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்' என்று தற்போது அழைக்கப்படும் 'லிஷா', இனி 'லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள், மரபுடைமைச் சங்கம்' என்று அழைக்கப்படும். பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
மக்களுக்கு நன்கு அறிமுகமான 'லிஷா' எனும் சுருக்கமான பெயர் தக்கவைத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
ஐந்தாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நண்பகல் வாக்கில் நிறைவுபெற்றதாக லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள், மரபுடைமைச் சங்கம் கூறியது.

