சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர் தலைவர்களை உருவாக்கவும் வசதி குறைந்த பின்னணியிலிருந்து வருவோருக்கு ஆதரவளிக்கவும் உதவும் நிதி நேற்று தொடங்கப்பட்டது.
‘லீ குவான் இயூ நூற்றாண்டு நிதி’ என்று அழைக்கப்படும் இந்நிதி, இதுவரை தனியார் மற்றும் மக்கள் துறைகளிலிருந்து பெறப்பட்ட $82 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையிலிருந்து இந்நிதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமரர் திரு லீ 1923, செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்து, தமது 91வது வயதில் 2015ஆம் ஆண்டில் மறைந்தார்.
திரு லீயின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில், சிங்கப்பூர் முன்னோடித் தலைமுறைத் தலைவர்களின் பண்புநெறிகளும் கொள்கைகளும் பிரதிபலிக்கும் என்று துணைப் பிரதமர் நேற்று தனது உரையில் தெரிவித்தார்.
“நமது இளைய தலைமுறையை உருவாக்குதல், அவர்கள் தங்கள் முழுத் திறனை அடைய உதவுதல் முதலியவை அவற்றுள் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய முக்கிய படிப்பினை. நமது மக்களே சிங்கப்பூருக்கு இருக்கும் ஒரே வளம்.
“அதனால்தான் ஆரம்பகாலங்களில் நாம் சிரமப்பட்டாலும், திரு லீ மக்களின் மீது முதலீடு செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து வந்தார். அவர் அடிக்கடி இளையர்களைச் சந்தித்து, அவர்களை சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கவும் நாட்டு நிர்மாணத்தில் பங்களிக்கவும் உற்சாகப்படுத்தினார்,” என்றும் திரு வோங் விவரித்தார்.
சிங்கப்பூர் இளையர்களின் மேம்பாட்டில் உதவுவதற்கும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும், வர்த்தகத் தலைவர்களால் அடித்தள முயற்சியாக தொடங்கப்பட்ட இந்நிதி, இளையர்களைத் தொலைநோக்குள்ள தலைவர்களாக உருவாக்கும் நோக்கத்துக்கு உதவும் என்று கல்வி அமைச்சின் அறிக்கை நேற்று தெரிவித்தது.
வெள்ளிக்கு வெள்ளி என்ற முறையில் அரசாங்கம் இந்நிதிக்கு $50 மில்லியன் வரை ஆதரவளிக்கும் என்றும் திரு வோங் சொன்னார். கல்வி அமைச்சின் கல்வி நிதித் திட்டத்தின் கீழ், ஒவ்வோர் ஆண்டும் 2,000 மாணவர்கள் உபகாரச் சம்பளங்கள், உதவித் திட்டங்கள் மூலம் உதவி பெறுவார்கள்.
சிங்கப்பூர் இளம் தலைவர்கள் திட்டத்துக்கும் ஆதரவளிக்கும் இந்நிதித் திட்டத்தையும் நகர பசுமை மற்றும் சுற்றுப்புறவியலுக்கான லீ குவான் இயூ பட்டக்கல்விக்குப் பிந்திய உபகாரச் சம்பளத் திட்டத்தையும் நேற்று திரு வோங் தொடங்கி வைத்தார்.
மேலும், லீ குவான் இயூ உபகாரச் சம்பள விருதுத் திட்டத்தின் விரிவாக்கத்துக்கும் வசதி குறைந்த 1,000 தொழில்நுட்பக் கல்விக் கழக, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கவும் இந்நிதி உதவும் என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தில் பங்குகொள்ளும் முதற்தொகுதி 580 மாணவர்களை நேற்று திரு வோங் வரவேற்றார். பண்புநலன், ஊக்கம் ஆகியவை தலைமைத்துவத்துக்கு முதற்படி பண்புகள் என்று அவர்களுக்கு எடுத்துரைத்தார்.