பரிணாம வளர்ச்சியின் காரணமாக, புதிய தொழில்நுட்பங்களால் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் அதேவேளையில் சவால்களும் தலையெடுக்கின்றன. அதற்கேற்ப உள்துறைக் குழுவும் தனது உத்திகளில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
அதனால்தான், உள்துறைக் குழு புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி, ஆகப் புதிய புத்தாக்கங்களையும் மேம்பாடுகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று தெரிவித்தார்.
'ஹெட்ச்' எனும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் (எச்டிஎக்ஸ்) புதிய புத்தாக்க நிலையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார்.
"தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. எச்டிஎக்ஸ் அதனை நன்கு உணர்ந்துள்ளது. ஆகையால்தான், புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுடனும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுடனும் அணுக்கமாகப் பணியாற்றி, அவற்றின் சிறந்த யோசனைகளையும் புத்தாக்கங்களையும் தனது மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறது," என்றார்.
"எச்டிஎக்ஸ் அமைப்பு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. இருப்பினும், அது தனது உள்துறைக் குழு நடவடிக்கைகளில் அதிக அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. அதற்கு ஓர் உதாரணம், தானியக்க எல்லை கட்டுப்பாட்டு முறை.
"குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கையாளும் இந்த முறையால், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களும் சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் பயணிகளும் தங்கள் கடவுச்சீட்டுகள் இல்லாமல் குடிநுழைவை அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கடக்க முடியும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
"நமது நிலவழிச் சோதனைச் சாவடிகளில் கார்களுக்கும் தானியங்கி குடிநுழைவுக் கடக்கும் முறையை அமல்படுத்த சோதனை முன்னோட்டங்கள் நடப்பில் உள்ளன.
"இதுபோன்று இன்னும் அதிகமாக செய்ய எச்டிஎக்ஸ் அமைப்பும் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களும் இணைந்து உள்துறைக் குழு அதிகாரிகளுடன் பணியாற்றும்.
"புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுடன் நீக்குப்போக்கான முறையில் எச்டிஎக்ஸ் அமைப்பு தொடர்ந்து வேலை செய்யும். அரசாங்க சேவையைப் போலல்லாமல், இது ஒரு முற்றிலும் மாறுபட்ட வேலை கலாசாரத்தைக் கொண்டிருக்கும்," என்றும் அமைச்சர் சண்முகம் விளக்கினார்.
ஆயர் ராஜாவில் உள்ள லாஞ்ச்பேட்@ஒன்-நார்த் கட்டடத்தில் அமைந்துள்ள 'ஹெட்ச்' அமைப்பு, தனது ஊக்கமளிப்பு திட்டம் மூலம் புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஈர்க்கவும், பொதுமக்களின் இடர்காப்புக்கும் பாதுகாப்புக்கும் உதவும் புத்தாக்கத் திட்டங்களுக்கு வழி வகுக்கும் தொழில்நுட்பங்களை ஈர்க்கவும் நோக்கம் கொண்டுள்ளது என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

