ஷங்ரிலா ஹோட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பாதுகாப்புச் சோதனைகள் நடப்பில் இருக்கும் என்று காவல்துறை கூறியது.
இந்தச் சோதனைகள் ஜூன் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறும். இதனைக் காவல்துறை நேற்று வெளியிட்ட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆலோசனை குறிப்பில் தெரிவித்தது.
ஆசிய-பசிபிக் வட்டார நாடுகளின் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகளும், அமைச்சர்களும் கலந்துகொள்ளும் 20வது ஷங்ரிலா கலந்துரையாடல் எனும் வருடாந்திர உச்சநிலைக் கூட்டத்துக்காக இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஹோட்டலுக்கு அருகே உள்ள சாலையை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஆண்டர்சன் ரோடு, ஆரஞ்ச் குரோவ் ரோடு ஆகியவை.
தாமதங்களைத் தவிர்க்க முன்னரே தங்களின் பயணங்களைத் திட்டமிட வேண்டும் என்று காவல்துறை கூறியது.
தங்ளின் ரோட்டிலிருந்து ஸ்டீவன்ஸ் ரோட்டை நோக்கிச் செல்லும் அல்லது ஆர்ச்சர்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் ஸ்டீவன்ஸ் ரோடு, பால்மோரல் ரோடு ஆகியவற்றில் செல்லும் வாகனங்கள் ஸ்காட்ஸ் ரோட்டைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஹோட்டல் வளாகத்துக்குள் கார் நிறுத்தும் இடங்கள் குறைவாகவே இருக்கும் என்பதால், அங்கு செல்வோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சட்டத்துக்குப் புறம்பாகவோ, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் என்றும் காவல்துறை கூறியது.
இந்தக் காலத்தில் சிங்கப்பூர் சிவில் போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியின்றி, அந்தப் பகுதியில் ஆளில்லா வானூர்திகளோ, உயரே பறக்கும் பலூன்களோ பறக்க அனுமதிக்கப்படாது.