கணவர் விவாகரத்து வேண்டும் என்று கேட்டதால் அவர்மீது வெந்நீரை ஊற்றிக் காயப்படுத்திய இந்தோனீசியப் பெண்ணுக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசியரான 24 வயது திரு முகம்மது ரஹிமி ஷமிர் அகமது சஃபுவானைத் தாக்கிய குற்றத்தை ரஹிமா நிஸ்வா என்ற அந்த 29 வயதுப் பெண் ஒப்புக்கொண்டார்.
இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும், 2022 டிசம்பரிலிருந்து அவர்களது மணவாழ்வில் புயல் வீசத் தொடங்கியது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் ரஹிமாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஹிமாவையும் அவரின் தாயாரையும் பார்க்க திரு ரஹிமி சிங்கப்பூரிலிருந்து பாத்தாமிற்குச் சென்றார்.
மார்ச் 19ஆம் தேதி நடந்த அந்தச் சந்திப்பில், திரு ரஹிமி விவாகரத்துக்கான சாத்தியத்தைப் பற்றிப் பேசியபோது, ரஹிமா அப்போது ஒன்றும் சொல்லவில்லை.
மறுநாளே திரு ரஹிமி சிங்கப்பூர் திரும்பிவிட்டார்.
இருப்பினும், ரஹிமாவால் அதனை அப்படியே விட்டுவிடமுடியவில்லை.
மார்ச் 22ஆம் தேதி ரஹிமா, சக பெண் ஊழியர் ஒருவருடன் பாத்தாமிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தார்.
அதற்கு மறுநாள் தம் கணவரின் வீட்டிற்குச் சென்று, தாம் குடுவையில் கொண்டுசென்ற வெந்நீரை அவர்மீது ஊற்றினார்.
தம்மைப் பற்றிய அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான கறுப்பு அங்கியையும் கண் மட்டும் தெரியும் வகையில் தலையில் முக்காடும் ரஹிமா அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது.
அதன்பின் அங்கிருந்த தப்பிய ரஹிமா, மீண்டும் படகு முனையத்திற்குச் சென்று பாத்தாமிற்குக் கிளம்பினார். ஆனாலும், அவரது முயற்சி ஈடேறவில்லை.
திரு ரஹிமியின் உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, கடலோரக் காவல் படையினர் அந்தப் பயணப் படகை மறித்து, ரஹிமாவைக் கைதுசெய்தனர்.
பாதிக்கப்பட்ட திரு ரஹிமி சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு 16 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

