ஒற்றுமையே பலம் என்பதை கொவிட்-19 கொள்ளைநோய் நிரூபித்து இருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். மேலும், சிங்கப்பூரர்கள் இடையிலான இந்த ஒற்றுமையையும் நாட்டு நலனையும் தொண்டூழியம் வலுப்படுத்த உதவும் என்றார் அவர்.
"நாம் தொண்டு செய்யும்போது நம்மைவிடப் பெரிதான ஒன்றின் அங்கமாக மாறுகிறோம். வெவ்வேறு வாழ்க்கைச் சூழலைக் கொண்டவர்களைச் சந்தித்து சமுதாயத்தில் உள்ள பன்முகத்தன்மையை மதிக்கக் கற்றுக்கொள்கிறோம்," என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
'#கிவ்அஸ்ஒன்எஸ்ஜி' இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய அதிபர், சமுதாயத்தையும் நாட்டையும் வளர்ப்பதில் தொண்டூழியம் ஆற்றும் பங்கை விவரித்தார்.
சுவா சூ காங் சமூக மன்றத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் சிறார்கள் முதல் முதியோர் வரை சுமார் 180 பொதுமக்கள் பங்கேற்றனர்.
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை ஒட்டி தொடங்கப்பட்ட இரண்டு இயக்கங்களில் ஒன்றான '#கிவ்எஸ்ஒன்எஸ்ஜி', தொண்டூழியத்தையும் லாபநோக்கமற்ற இயக்கங்களில் பங்காளிகளாவதையும் ஊக்குவிக்க முனைகிறது.
'#யுனைட்டட்எஸ்ஒன்எஸ்ஜி' என்ற இரண்டாவது இயக்கம், நேரடியாகவும் மின்னிலக்கத் தளங்கள் வழியாகவும் சிங்கப்பூரை இணைய ஊக்குவிக்கிறது.
இவ்வாண்டின் தேசிய தினத்தின் 'ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்' முழக்கம் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் காண சிங்கப்பூரை ஊக்குவிப்பதாக அதிபர் தம் உரையில் தெரிவித்தார.
தொண்டூழியத்தில் ஈடுபடும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் சமூக சேவை செய்யும் உணர்வை மேலும் அதிகரிக்க முடியும் என்று அதிபர் கூறினார்.
சிங்கப்பூர் முழுவதும் தொண்டூழியத்தை ஊக்குவிக்கும் 'எஸ்ஜி கேர்ஸ்' இயக்கத்தின்கீழ் இயங்கும் 24 தொண்டூழிய நிலையங்கள் பற்றிக் கூறிய திருவாட்டி ஹலிமா, அந்நிலையங்களில் 64,000 பேருக்கு மேல் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன் அவை 5,000க்கும் கூடுதலான தொண்டூழியத் தலைவர்களையும் சமூக அமைப்புகளுடன் 3,000 பங்காளித்துவங்களையும் உருவாக்கியுள்ளன.
சிங்கப்பூரர்கள் தங்களது ஆர்வத்தின் அடிப்படையில் தொண்டூழியம் செய்யும் வாய்ப்பை உருவாக்குவதில் தொண்டூழிய நிலையங்கள் முக்கிய பங்கு வகித்திருப்பதாக அவர் சுட்டினார்.

