ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர், டிபிஎஸ் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களைப் பெற முயன்றது குறித்து அவ்வங்கி காவல்துறைக்கு விழிப்பூட்டியது.
இது புதுவகையான மோசடித் தந்திரம் என்று டிபிஎஸ் வங்கி குறிப்பிட்டது.
'டேனியல்' என்று தம்மைக் கூறிக்கொண்ட அந்தச் சந்தேகப் பேர்வழிக்கும் டிபிஎஸ் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்குமான உரையாடலின் திரைச்சுடுவு (ஸ்கிரீன்ஷாட்) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், டிபிஎஸ் வங்கியிடமிருந்து அப்பெண்ணின் விவரங்களைத் தாம் பெற்றதாக 'டேனியல்' கூறியுள்ளார். அண்மைய மோசடி ஒன்றில் அப்பெண் சிக்கியதாகத் தமக்குத் தெரியவந்ததாகக் கூறிய டேனியல், அத்தகைய மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விருப்பமா என்றும் கேட்டுள்ளார்.
அப்பெண் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பெண் குறித்த விவரங்களை டேனியல் எவ்வாறு பெற்றார் என்பது தெரியவில்லை. ஆனால், அவரது குறுஞ்செய்திகளில் இலக்கண, நிறுத்தற்குறிப் பிழைகள் இருந்தன. இத்தகைய பிழைகளே பெரும்பாலும் அவை மோசடி என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
முறையான முன்னனுமதி இல்லாமல் மூன்றாம் தரப்பிடம் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்கள் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளப்படாது என்று டிபிஎஸ் வங்கி விளக்கமளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரையும் தொடர்புகொண்டதாக அவ்வங்கி தெரிவித்தது.
டேனியலின் எண்ணுக்கு அழைத்தபோதும் குறுஞ்செய்தி அனுப்பியபோதும் பதிலில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

