டேங்க் ரோட்டில் புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழாவைக் காண வியாழன் (ஜூன் 1 ஆம் தேதி) காலை வந்த பக்தர்களுடன் மழை மேகங்களும் திரண்டன.
ஆனால் பக்திக்கும் உறுதிக்கும் வளைந்தது வானிலை. தொடக்கத்தில் கனமாகப் பெய்தபின் திருக்குடமுழுக்கின் முக்கிய அங்கமான கலசம் ஊற்றுதலின்போது மழைப்பொழிவு குறைந்தது.
வண்ணமயமான கோலம், கோயிலின் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தில் மட்டுமல்ல, பல வண்ண மழையங்கிகளை அணிந்திருந்த பக்தகோடிகள் இடையிலும் காணப்பட்டது.
கோயிலின் 75 அடி உயர கோபுரத்தின் மீது சிவாச்சாரியர்கள் ஏறி யாகசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட நன்னீரை காலை 9.15 மணிக்கு ஊற்றியதைச் சுமார் 10,000 பக்தர்கள் மழை நீரில் நனைந்தபடியே கூடியிருந்து கண்டனர்.
முதியோர், சக்கர நாற்காலியில் வந்திருந்தோர் உள்ளிட்ட பலர், குடமுழுக்கை அமர்ந்தபடியே காணும் வசதியை ஆலயம் ஏற்படுத்தியது. இப்பெரும் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 1,000 தொண்டூழியர்கள் ஆலய வளாகத்தைச் சுற்றி இருந்து பக்தர்களுக்கு வழிகாட்டினர்.
பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக 1,000 இருக்கைகளுக்கான இடவசதி உடைய கூடாரம் ஒன்று ரிவர் வேலி ரோட்டிலுள்ள திறந்தவெளியில் அமைக்கப்பட்டது.
நிஜ மழையுடன், பிரபல செவ்விசைப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரமும் பன்னிரண்டு இசைக்கலைஞர்களும், வந்திருக்கும் பக்தர்கள் மீது இசைமழை பொழிந்தனர்.
குடமுழுக்கிற்காக டேங்க் ரோடு மே 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஜூன் 1 ஆம் தேதி இரவு 9 மணி வரை மூடப்பட்டுள்ளது. அத்துடன் கிளமென்சியூ அவென்யூ, ரிவர் வேலி ரோடு ஆகியவை பின்னிரவு 1 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்தில் இன்று காலை நிலவரப்படி அதிக நெரிசல் இருப்பதால் பக்தர்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வருகை தர முடியாததற்குப் பிரதமர் வருத்தம்
பிரதமர் லீ சியன் லூங் இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டபோதும் அவருக்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டதால் வருகை அளிக்க முடியவில்லை.
“அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கைக் காண ஆவலுடன் காத்திருந்தபோதும் மற்றவர்களின் பாதுகாப்புக் கருதி நான் இதனைத்த தவிர்க்க வேண்டியுள்ளது,” என்று சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிட்டார் பிரதமர் லீ.
“ஏற்பாட்டாளர்களிடமும் திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான குடமுழுக்கிற்காகவும் கொண்டாட்டங்களுக்காகவும் என் வாழ்த்துக்கள்,” என்று மேலும் சொன்னார் அவர்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், கலாசார, சமூக, இளையர் அமைச்சர், இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் தொங் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
வருகை அளிக்கும் பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 30,000 ஆயிரத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.