'ஷாப் இன்ஷுரன்ஸ் சிங்கப்பூர்' காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஆடவர் ஒருவர், போலியான கோரிக்கைகளைச் சமர்ப்பித்து அந்நிறுவனத்தை $8.9 மில்லியன் வழங்கவைத்து ஏமாற்றியதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சுயாண்டி என்ற அந்த நபர், ஏழாண்டுக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 300 போலியான கோரிக்கைகளைச் சமர்ப்பித்து நிறுவனத்தை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதில் வழங்கப்பட்ட தொகை அனைத்தும் மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்குகளில் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், 58 முறை மோசடி செய்யும் நோக்கத்துடன் போலி மின்னஞ்சல்களை அனுப்பி, அந்தக் காப்புறுதி நிறுவனம் மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்குகளுக்கு $1.6 மில்லியனுக்கும் மேல் வழங்கவைத்த குற்றத்திற்காகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
45 வயதான அந்த சிங்கப்பூர் நிரந்தரவாசிமீது நேற்று 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏமாற்றிய குற்றத்திற்காக 7 குற்றச்சாட்டுகளும் ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 8 குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.
அதோடு, பொய் கணக்குகளை உருவாக்கியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளையும் குற்றச்செயல் மூலம் கிடைத்த பலன்களுக்கான மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.
2010ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்குகளுக்கு $8.9 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படுவதற்கு 297 பொய் கோரிக்கைகளைச் செயல்படுத்த, அவர் ஷாப் நிறுவனத்தை ஏமாற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
முன்னதாக அந்த நிறுவனம் 'ஏஸ் இன்ஷுரன்ஸ்' என்றழைக்கப்பட்டது.
மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்குகளிலிருந்து சுமார் $55,600 சுயாண்டியின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாக விசாரணை முடிவுகள் காட்டியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்நிறுவனத்தில் தற்போது பணிபுரியாத சுயாண்டி, தாம் வழக்கறிஞரைக் நியமித்திருப்பதாகவும் குற்றத்தை ஒப்புக்கொள்ள திட்டமிடுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்ப வேண்டும்.

