ஏழாவது தலைமுறை எம்ஆர்டி ரயில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. துவாஸ் லிங்க் எம்ஆர்டி நிலையத்தை வந்தடைந்த அல்ஸ்டோம் மோவியா ஆர்151 ரக ரயிலை வரவேற்க 100க்கும் மேற்பட்ட ரயில் ஆர்வலர்கள் நிலையத்தில் திரண்டனர்.
நேற்று காலை 7.10 மணிக்குப் புதிய ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது அங்கு திரண்டிருந்தோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மொத்தம் 106 ஏழாவது தலைமுறை ரயில்கள் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் இயக்கப்படும்.
நேற்று நிலையத்தில் கூடி இருந்தோர் புதிய ரயிலில் ஏறி பயணம் செய்தனர்.
ஏழாவது தலைமுறை ரயிலில் புதிய அம்சங்கள் உள்ளன. ஐந்தாவது, ஆறாவது தலைமுறை ரயில்களைப் போலவே புதிய ரயில்களிலும் எல்சிடி பயணப் பாதை வரைபட வசதிகள் உள்ளன. அத்துடன், இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ரயில்களைவிட ஏழாவது தலைமுறை ரயிலில் உட்புறம் வெளிச்சமாக இருப்பதை அதில் நேற்று பயணம் செய்தோர் சுட்டினர். இதற்கு ரயிலில் உள்ள பெரிய, ஒரே சட்டத்தில் வடிவமைக்கப்பட்ட சன்னல்கள் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
புதிய ரயிலில் குழந்தைத் தள்ளுவண்டிகளையும் சக்கரநாற்காலிகளையும் வைக்க கூடுதல் இடங்கள் உள்ளன. தற்போது உள்ள ரயில்களில் இருக்கும் இருக்கைகளைப் போல இல்லாது இடத்தை மிச்சப்படுத்தி கூடுதல் பயணிகள் உட்கார வகை செய்யும் வடிவமைப்பைக் கொண்ட இருக்கைகளைப் புதிய ரயில்கள் கொண்டிருக்கும்.
இதற்கிடையே, எஸ்எம்ஆர்டி நிறுவனம் கடைப்பிடிக்கும் சுய பரிசோதனை முறை பலன் அளித்திருப்பதாக அந்நிறுவனத்தின் துவாஸ் வெஸ்ட் பணிமனை மேலாளர் யுஸ்மார் யூசோஃப் கூறினார். ஒவ்வொரு நாளும் காலையில் ஏறத்தாழ 12 நிமிடங்களுக்கு இந்தச் சுய பரிசோதனை முறை நடத்தப்படுகிறது.
குளிர்சாதனம், கதவுகள், ‘பிரேக்’ எனப்படும் ஓட்டத் தடை கருவிகள், உந்து இயந்திரங்கள் மற்றும் உபரி பாகங்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்தால் அதை எளிதில் அடையாளம் காண இந்த அணுகுமுறை உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.