சிங்கப்பூரில் ஷங்ரிலா தற்காப்பு உச்சநிலை கலந்துரையாடல் நடைபெற்று வருவதற்கிடையே உலகின் பிரதான உளவுத்துறை தரப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ரகசியக் கூட்டம் ஒன்றைக் கடந்த வாரஇறுதியில் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனச் செய்தித் தகவல் கூறுகிறது.
தற்காப்பு மாநாடு நடைபெறும் அதேவேளையில் இத்தகைய கூட்டங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் பல ஆண்டுகளாக ஏற்பாடு செய்துவந்துள்ளதாகவும் அந்தக் கூட்டங்கள் வேறு இடத்தில் நடந்து வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் விளக்கியது.
இதுபோன்ற கூட்டம் குறித்து இதற்குமுன் செய்திகள் வெளியிடப்பட்டதில்லை.
அமெரிக்காவைப் பிரதிநிதித்து தேசிய உளவுத்துறை இயக்குநர் எவரல் ஹேய்ன்ஸ் கூட்டத்தில் கலந்துகொண்டதாக அறியப்படுகிறது. சீனாவும் இந்தியாவும் இந்த ரகசியக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் இந்த ரகசியக் கூட்டத்தின் நோக்கமே தவிர மோதலுக்கு வழிவகுப்பது அன்று என ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்தோர் குறிப்பிட்டிருந்தனர்.

