நாட்டின் அத்தியாவசிய தேவையான நீரைப் பாதுகாக்கும் அரசாங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நீர் மறுசுழற்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.
பொதுப் பயனீட்டுக் கழகம், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து தண்ணீர் சிக்கனத் திறன் நிதியை ஒரு மில்லியன் வெள்ளியிலிருந்து அதிகபட்சமாக ஐந்து மில்லியன் வெள்ளி வரை அதி கரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிதி, குறிப்பாக நிறுவனங்களை நோக்கமாகக் கொண்டது. 2065ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூருக்குத் தேவைப்படும் மொத்த நீரில் அறுபது விழுக்காட்டை வீடுகள் அல்லாத இதர துறைகள் பயன்படுத்தும் என்பதே இதற்கு காரணம்.
நிறுவனங்கள் கவனமாக நீரைப் பயன்படுத்தவும் நாட்டின் பற்றாக்குறையான நீரை மறுசுழற்சி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம், நீடித்த நீர் வளத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.
அலுவலகக் கட்டடங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய துறை, தற்போது குடியரசின் நீர் தேவையில் 55 விழுக்காட்டைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சிங்கப்பூரின் தண்ணீர் தேவை 2065ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மற்றொரு மாற்றமாக ஜூலையிலிருந்து தண்ணீரை சேமிக்க உதவும் திட்டங்களைக் கண் டறிந்து செயல்படுத்தும் நிறு வனங்களுக்கு அவற்றுக்கான செலவில் 70 விழுக்காட்டை பொதுப் பயனீட்டுக் கழகம் வழங்கும். இது, அதிகபட்சமாக 30,000 வெள்ளி வரை இருக்கும் தற்போது 50 விழுக்காடு நிதி மட்டுமே வழங்கப்படுகிறது.
தண்ணீர் சிக்கனத் திறன் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார மாநாட்டில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர்ச் சேமிப்பு திட்டங்களில் நிறுவனங்கள் முனைப்புடன் ஆர்வம் காட்டும் என்றார் அமைச்சர்.
குறைந்தது, மாதம் 1,000 கன மீட்டர் அளவு தண்ணீரைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மறுசுழற்சி நிதிக்குத் தகுதி பெறுகின்றன.
கிளார்க் கீயில் உள்ள பேரடாக்ஸ் சிங்கப்பூர் மர்ச்சண்ட் கோர்ட் ஹோட்டலில் நேற்று தொடங்கிய அனைத்துலக நீர் வார மாநாடு அடுத்த மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.