மலேசியாவில் உள்ள கராக்-கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிஎன்ஏ செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
45 வயது திரு கைரூல் ஸைனுதீன் (படம்) கோலாலம்பூரில் பணிபுரிந்து வந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
பாகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தானுக்குச் சென்று தமது பெற்றோரைப் பார்த்துவிட்டு தமது மனைவியை அழைத்துக்கொண்டு வீடு திரும்ப கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது தமது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை திரு கைரூல் இழந்ததாகவும் சாலைத் தடுப்பில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சாலைத் தடுப்பு மீது மோதியதை அடுத்து அவர் எதிர்த்திசை செல்லும் சாலைத் தடத்துக்குத் தூக்கி எறியப்பட்டார்.
அப்போது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
திரு கைரூலுக்கு தலையில் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டன. அவர் சம்பவ இடத்தில் மாண்டார். திரு கைரூலின் மரணம் மீளாத் துயரை ஏற்படுத்தியிருப்பதாக மீடியாகார்ப் தெரிவித்தது. அவரது குடும்பத்தாருக்கு அதன் ஆழ்ந்த அனுதாபங்களைத் அது தெரிவித்துக்கொண்டது.