சிங்டெல் நிறுவனமும் எஸ்டி எஞ்சினியரிங், எஸ்பி குழுமத்தின் கூட்டு நிறுவனமான 'எஸ்பிடெல்'லும் தேசிய அளவில் தொழில் நிறுவனங்களுக்கான 'குவான்டம் சேஃப்' எனும் துளிமப் பாதுகாப்புக் கணினிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று நடந்த 'ஏஷியா டெக் - சிங்கப்பூர் சோஷியல்' நிகழ்ச்சியில் தேசிய துளிமப் பாதுகாப்புக் கட்டமைப்பின் புதிய நிலையை அறிமுகப்படுத்தினார்.
தொடர்பு, தகவல் அமைச்சு மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மின்னிலக்க இணைப்பு வரைவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இக்கட்டமைப்பு இடம்பெறுகிறது.
துளிமக் கணிப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வழக்கமான கணினிகளால் விடைகாண சிக்கலாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க இயலும் எனக் கூறப்படுகிறது. அத்துடன், பாதுகாப்பான தொடர்புகளுக்கான நடப்பிலுள்ள மறைக்குறியீடுகளாலான கணினி நிரல் நெறிமுறைகளை உடைக்கவும் இதனால் முடியலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் துளிமப் பாதுகாப்புத் தொடர்புத் தொழில்நுட்பத்தைச் சோதித்துப் பார்க்கும் வகையில் தேசிய துளிமப் பாதுகாப்புக் கட்டமைப்பு சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக ஆணையம் கூறியது.
முன்னதாக, 'ஐடி குவான்டிக்' எனும் சுவிட்சர்லாந்து துளிம இணையப் பாதுகாப்பு நிறுவனத்துடன் சிங்டெல் நிறுவனம் நேற்று முன்தினம் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.

