சுவா சூ காங்கில் சிறுமி ஒருவரை மானபங்கம் செய்த சந்தேகத்தின் பேரில் 63 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோக் 803 கியட் ஹொங் குளோஸ் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாக திங்கட்கிழமை பிற்பகல் 12.49 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் வயது 10 என ‘ஸ்டோம்ப்’ இணையச் செய்தி குறிப்பிட்டது.
பிடிபட்ட ஆடவர் அந்த புளோக்கில் உள்ள காப்பிக் கடை ஒன்றில் துப்புரவு வேலை செய்து வந்ததாகவும் அச்செய்தி தெரிவித்தது.
சிறுமியின் தாயார் ஜோயென் என்பவர் தமது இரு மகள்களும் காலை உணவு வாங்கக் கடைக்குச் சென்றதாகக் கூறினார்.
அப்போது அச்சிறுமியரில் ஒருவரை அந்த ஆடவர் தமது வீட்டுக்கு அழைத்ததாகவும் ஆனால் அதற்கு மறுத்த சிறுமியின் மார்புப் பகுதியை ஆடவர் தொட்டதாகவும் அவர் கூறினார்.
சிறுமியரான மகள்கள் இருவரும் ஓடி வந்து, நடந்தவற்றைத் தம்மிடம் விளக்கிக் கூறியதாக வும் அப்பெண் தெரிவித்தார்.
ஜோயெனும் அதே பகுதியில் வேலை செய்வதாகக் கூறப்பட்டது. மானபங்கச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.