சிங்கப்பூரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் மே 13ஆம் தேதி பதிவானது. 1980களில் இருந்து பார்க்கும்போது அதிகமான மழைப்பொழிவு பெற்ற ஆண்டுகளில் 2022ஆம் ஆண்டும் ஒன்று.
பருவநிலை மாற்றத்தின் அறிவியல் விளைவுகளை முழு அளவில் மக்கள் முழுமையாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று கூறினார். இந்தப் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மற்றும் கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் என்னென்ன செய்கிறது என்பதை அவர் கூறினார்.
திரு டெஸ்மண்ட் லீ சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் நடக்கும் சுற்றுச்சூழல் வார மாநாட்டின் இரண்டாம் நாளில் பேசும்போது, “சிங்கப்பூரின் மொத்த கரிம வெளியேற்றத்தில் 20 விழுக்காட்டை வீடுகள், அலுவலகங்கள் போன்ற கட்டடங்கள் வெளியிடுகின்றன. அந்த கரிம வெளியேற்றத்தை நாம் சில வழிகளில் குறைக்கலாம். அவை, பசுமை ஆற்றலின் ஆதாரத்தில் இருந்து வரும் மின்சாரத்தைப் பயன்படுத்துதல், நிலையான நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் கட்டடங்களை உருவாக்குதல்,” என்று கூறினார்.
நகரமயமாக்கல் காரணமாக நம்மால் இந்தக் கரிம வெளியேற்றத்தின் அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அதைக் கட்டுப்படுத்த புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம். சிங்கப்பூரின் பசுமைக் கட்டடத்திற்கான சிறப்புத் திட்டத்தை அவர் இங்கு குறிப்பிட்டார்.
80% கட்டடங்களின் மொத்த தரை பரப்பளவைப் பசுமையாக்குவது. 2030ஆம் ஆண்டுக்குள் 80% புதிய கட்டடங்களை மிகக் குறைந்த ஆற்றலால் இயங்கும் கட்டடம் என்று வகைப்படுத்துவது ஆகியவை இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
2030ஆம் ஆண்டுக்குள் ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றின் உதவியுடன் சிறந்த தரநிலை வாய்ந்த பசுமை கட்டடங்களின் ஆற்றல் திறனை 80% மேம்படுத்துவதே மூன்றாவது இலக்கு.
ஜூரோங் லேக் வட்டாரம் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து உருவாக்கப்பட்டது என்று அந்த வட்டாரத்தை முன்னிலைப்படுத்திக் கூறினார்.