சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களின் பெரிய அளவிலான மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பில் தங்கள் கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்யலாம்.
மறுசீரமைப்புப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் 2026 இறுதி வரை நடைபெறும்.
தனது நிரந்தரக் காட்சிக்கூடங்களான இரண்டாம் தளத்தில் உள்ள ஐந்து காட்சிக் கூடங்கள், வட்டமான கண்ணாடிக் காட்சிக்கூடம், சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சிக்கூடம் ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படும்.
முதற்கட்டமாக இரண்டாம் தளத்தில் உள்ள காட்சிக்கூடங்கள் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு வரை மூடப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் நேற்று தெரிவித்தது.
ஆனால், சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்புப் பணிகளின்போது திறந்திருக்கும். பாதிக்கப்பட்ட காட்சிக்கூடங்கள் கடைசியாக மறுசீரமைக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு நடுப்பகுதியில் திறக்கப்பட்டன.
மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பாக தங்களின் கருத்தைத் தெரிவிப்பதன் மூலம் பங்குதாரர்களும் பொதுமக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இதன் மூலம் பலதரப்பட்ட கருத்துகளை ஒன்றிணைத்து அனைவரும் விரும்பும் காட்சிக்கூடங்களை அமைப்பதே தனது விருப்பம் என்றும் அரும்பொருளகம் விவரித்தது.
சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சிக்கூடத்தினுள், செல்லும் ஐம்பது மீட்டர் நீளம் கொண்ட உயர்த்தப்பட்ட நடைபாதையுடைய அரும்பொருளகத்தின் 15 மீட்டர் உயரமுள்ள வட்டக் கண்ணாடி குவிமாடத்தில் தீவிர மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அது 2024 இரண்டாம் பாதியிலிருந்து 2025 ஆகஸ்ட் வரை மூடப்பட்டிருக்கும்.
1887ல் திறக்கப்பட்ட அரும்பொருளகத்தின் பிரதான கட்டடம் தனது மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கும். அது செப்டம்பரில் தொடங்கி, 2025ல் நிறைவுபெறும்.
மறுசீரமைப்புப் பணிகளின்போது, அரும்பொருளகத்தின் நுழைவாயில்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படும் என்றும் அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அரும்பொருளகக் காட்சிக்கூடங்களின் மறுசீரமைப்புப் பணிகள் பற்றி கருத்து கூற விரும்புவோர் go.gov.sg/nmsengageinterest எனும் இணையத் தளத்தில் தெரிவிக்கலாம்.