குற்றப் புலனாய்வுப் பிரிவு, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் சென்ற மாதம் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை கேலாங் பகுதியில் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் 43 பேர் பிடிபட்டனர்.
சட்டவிரோதச் சூதாட்டம், பாலியல் உறவு சார்ந்த பொருள்கள் விற்பனை உள்ளிட்டவை தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை நேற்று தெரிவித்தது.
அவர்களில் ஒன்பது பெண்கள் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சட்டவிரோதச் சூதாட்டம் தொடர்பில் 39 முதல் 75 வயதிற்குட்பட்ட 18 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து 3,400 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம், கணினிகள், சூதாட்டம் சார்ந்த பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அத்துடன், பதிவுசெய்யப்படாத, $37,440 மதிப்புடைய இருமல் மருந்தையும் பாலியல் உறவைக் கூட்டும் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்பில் 32 மற்றும் 51 வயதுடைய ஆடவர் இருவர் உடல்நல உற்பத்திப் பொருள்கள் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
36 மற்றும் 60 வயதுடைய ஆடவர் இருவர் செல்லத்தக்க உரிமமின்றி உடல்தளர்த்தும் நிலையங்களை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுக் கேளிக்கை நிலையங்களில் சோதனையிட்டபோது, சங்கங்கள் சட்டத்தின்கீழ் 26 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
கள்ள சிகரெட் தொடர்பில் 64 வயது ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் உரிமமின்றி 60 வயது ஆடவர் ஒருவர் ‘சாத்தே’ உணவு விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனிநபர் நடமாட்ட சாதனங்களையும் மின்சார மிதிவண்டிகளையும் சட்டவிரோதமாக மாற்றியமைத்தது தொடர்பில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆடவர் அறுவர் சிக்கினர்.
வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்தும் சட்டத்தின்கீழ், 36 மற்றும் 40 வயதுடைய ஆடவர் இருவர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.