முன்னாள் தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மீது மானபங்கக் குற்றசாட்டு உள்ளது.
இந்நிலையில், அவர் வெளிநாடு செல்ல மாவட்ட நீதிமன்றம் ஒன்று அனுமதி அளித்துள்ளது. ஜெரமி ஃபெர்னாண்டோ என்ற அந்த விரிவுரையாளர் தான் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ஜூன் மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதிவரை 'ஹேங்கர் ஆர்டிஸ்டிக் சென்டர்' என்ற இடத்தில் தங்கி அங்கு நடைபெறும் கல்வி ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளதாகக் கூறி லிஸ்பன் செல்ல நேற்று நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.
இதற்கு அனுமதி அளித்த மாவட்ட நீதிமன்றம் ஒன்று அவர் தமது முழுப் பயணத் திட்டத்தையும் காவல்துறை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டுமென்று கூறியது. மேலும், அவர் திரும்பி வந்த ஒரு நாளைக்குள் தமது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.
திரு ஜெரமி ஃபெர்னாண்டோ, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி மாது ஒருவரின் உதட்டில் முத்தமிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையில் பல்கலைக்கழகம் புகார் செய்துள்ளது.

