சிங்கப்பூரில் பிறந்த நகைச்சுவைக் கலைஞர் நிகழ்ச்சி ஒன்றின்போது தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மனதைப் புண்படுத்தும் வகையில் திருவாட்டி ஜோஸ்லின் சியா பேசியதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனனும் அடங்குவர்.
அண்மையில் அமெரிக்காவில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான போட்டித்தன்மையை நையாண்டி செய்யும் வகையில் பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி சியா, மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்து பேசினார்.
அந்த விமானம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிப் பறந்துகொண்டிருந்தபோது மாயமானது.
அதைத் தேட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இன்றுவரை அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மாண்டுவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரின் உணர்வுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் வகையில் திருவாட்டி சியா பேசினார்.
சிங்கப்பூரரும் மலேசியரும் பேசிக்கொள்வது போல அவரது நகைச்சுவை அங்கம் அமைந்தது.
40 ஆண்டுகளாகியும் ஏன் இன்னும் சிங்கப்பூருக்கு வந்து தம்மைப் பார்க்கவில்லை என்று மலேசியரை சிங்கப்பூரர் கேட்பதுபோல திருவாட்டி சியா பேசிக் காட்டினார்.
“சிங்கப்பூருக்கு வர முயன்றேன். ஆனால் எங்கள் விமானங்களால் பறக்க முடியாது,” என்று மலேசியர் பதிலளிப்பதுபோல திருவாட்டி சியா நடித்துக் காட்டினார்.
இதைக் கேட்டு அந்த அரங்கில் கூடியிருந்த சிலர் சிரித்தனர், சிலர் அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ச்சியடைந்தோரைப் பார்த்த திருவாட்டி சியா, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது வேடிக்கையா இல்லையா என்றும் சிலருக்கு அந்த நகைச்சுவை புரியவில்லை என்றும் கூறினார்.
இவற்றைக் காட்டும் 89 விநாடி காணொளி இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
“ஜோஸ்லின் சியாவின் கருத்துகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
“அவருடைய இந்தக் கருத்துகள் சிங்கப்பூரர்களின் கருத்துகள் அல்ல. சிங்கப்பூரர்கள், மலேசியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கிடையிலான உறவுக்கு மதிப்பளிப்பவர்கள். மனதைப் புண்படுத்தும் இந்தக் கருத்துகளால் மலேசியர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புதன்கிழமையன்று டுவிட்டரில் பதிவிட்டார்.
திருவாட்டி சியாவின் கருத்துகள் மாண்ட பயணிகளுடைய குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத வகையிலும் மலேசியர்கள் அனைவரையும் காயப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதாகவும் ஆசிய விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகவும் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஸம்பிரி அப்துல் காதர் சாடினார்.
திருவாட்டி சியா தற்போது சிங்கப்பூரர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.