இவ்வாண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, அறிவித்துள்ள நிலையில், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) பேராதரவு தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், “சகோதரர் தர்மன் சண்முகரத்னம், நம் ஊழியர்கள் மீதும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் அக்கறை கொண்ட ஒரு தலைசிறந்த அரசியல் மேதை,” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன், அதிபர் தேர்தலில் தாம் போட்டியிட நோக்கம் கொண்டுள்ளது பற்றி ஏற்கெனவே குறிப்பால் உணர்த்தியிருந்ததாக திரு இங் குறிப்பிட்டார்.
“இது உறுதியாக அற்புதமான செய்தி. திரு தர்மனின் இந்த முடிவை வரவேற்று, முழு மனத்துடன் அவருக்குத் துணை நிற்கும் சக சகோதர, சகோதரிகளின் உணர்வை நான் எதிரொலிக்கிறேன்,” என்று திரு இங் கூறி இருக்கிறார்.
திரு தர்மன் என்டியுசி அமைப்பின், நமது தொழிற்சங்கத் தலைவர்களின் நீண்டகால நண்பர் எனக் குறிப்பிட்ட அவர், அவரது நம்பமுடியாத தொலைநோக்கும், பேரறிவும், அரவணைப்பும், பணிவும் கடந்த சில பத்தாண்டுகளில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரும்பயனை நல்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடி உச்சத்தின்போது திரு தர்மனுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் எனக் குறிப்பிட்டார் திரு இங்.
“ஒருநாள் காலையில் தேசிய வேலைகள் மன்றம் முதன்முறையாகக் கூடியது. மெய்நிகர் வழியில் நடந்த அக்கூட்டத்திற்குத் திரு தர்மன் தலைமை வகித்தார். பெருந்தொற்றுக் காலத்தின்போது நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் கூட்டாக உதவுவது எப்படி என்பது குறித்து ஆராய நான் உட்பட தொழிற்சங்கம், அரசாங்கம், நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூடியிருந்தோம். அது எதிர்பாராத சவால். அப்போது வலிமையின் கலங்கரை விளக்கமாகவும் எங்கள் பலரது நம்பிக்கையாகயாகவும் திரு தர்மன் திகழ்ந்தார்.
“சகோதரர் தர்மன் தெளிவான நோக்குடன், பொதுவான இலக்குகளை அடைவதில் வெவ்வேறு ஆர்வம் கொண்ட பல்வேறு தரப்பினரை திறமையாக ஒருங்கிணைத்தார். தேசிய அளவிலான இம்முயற்சியில் நெருங்கிய ஒத்துழைப்பின்மூலம் வெற்றியை அடைவது எப்படி என்று அவர் வலியுறுத்தினார். நடுத்தர வயது, முதிய ஊழியர்களிடத்தில் கூடுதல் அக்கறை செலுத்தும்படி அவர் அறிவுறுத்தினார்,” என்று திரு இங் நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூருக்காகவும் சிங்கப்பூரர்களுக்காகவும் முன்வந்திருப்பதற்காகத் திரு தர்மனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திரு இங், நமது தொழிற்சங்கங்களும் சமூக நிறுவனங்களும் அவருக்குப் பேராதரவு வழங்குவதாக உறுதி அளிக்கின்றன என்றும் பதிவிட்டு இருக்கிறார்.
தலைவர்கள் புகழாரம்
அரசியலிலிருந்து ஓய்வுபெறவுள்ள திரு தர்மனுக்குத் தலைவர்கள் பலரும் புகழ்மாலை சூட்டியுள்ளனர்.
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், “25 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அணுக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளோம். தாய்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் சிங்கப்பூருக்குப் பெருமை தேடித்தந்துள்ளார். புதிய பொறுப்பிலிருந்தபடி நாட்டிற்கும் நம் மக்களுக்கும் சேவையாற்ற விழையும் அவருக்கு என் வாழ்த்துகள்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் குறிப்பிட்டுள்ளார்.
“நான் அரசியலில் நுழைந்தபோதும் மனிதவள அமைச்சில் இருந்தபோதும் தனிப்பட்ட அளவில் உங்களது ஆலோசனைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு டான் கூறியிருக்கிறார்.
ஜூரோங் குழுத்தொகுதியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாட்டி ரஹாயு மஹ்ஸாமும் திரு சீ யாவ் சுவானும் திரு தர்மனுக்குப் புகழாரம் சூட்டிஇருக்கின்றனர்.
‘வெற்றிக் கணக்கு’
அதிபர் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தின் துருப்புச்சீட்டாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் விளங்குவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
ஆயினும், திரு தர்மனுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கால் அதிபர் தேர்தலில் மற்றவர்கள் போட்டியிடத் தயங்கலாம் என்றும் திரு தர்மன் போட்டியின்றித் தேர்வு செய்யப்படலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
“மசெகவிற்கு இதனைவிட சிறந்த வெற்றிக் கணக்கு இருக்க முடியாது,” என்று கூறியுள்ளார் அரசியல் பார்வையாளரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஸுல்கிஃப்லி பகாருதீன்.
இன, சமூக-பொருளியல் நிலை, அரசியல் கட்சி சாராது திரு தர்மனுக்குப் பரந்துபட்ட செல்வாக்கு இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகத் தங்களின் முதன்மையான தெரிவு திரு தர்மன்தான் என்று 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வில் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்து இருந்ததும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பல அனைத்துலக அமைப்புகளில் பங்காற்றி இருப்பதால் திரு தர்மனுக்கு அனைத்துலக அளவிலும் நன்மதிப்பு உள்ளது என்றார் அரசியல் பகுப்பாய்வாளரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணை விரிவுரையாளருமான டாக்டர் ஃபெலிக்ஸ் டான்.
“அடுத்ததாக, அவருக்கு உள்நாட்டிலும் பெரும் செல்வாக்கு இருக்கிறது. பொதுத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், அவரது குழுத்தொகுதியில்தான் அதிக வாக்கு வித்தியாசம் இருப்பதைக் காணலாம்,” என்று டாக்டர் டான் சுட்டினார்.
சிங்கப்பூரர்கள் பலரும் திரு தர்மனைக் கட்சி சார்ந்து பாராமல், அவரை ஒரு பேராளுமையாகக் காண்பதாகச் சொன்னார் ‘போவெர் குரூப் ஏஷியா’ கொள்கை ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிடியா நியோவ்.
இடைத்தேர்தல் நடக்குமா?
அடுத்த மாதம் 7ஆம் தேதியுடன் திரு தர்மன் பதவி விலகவுள்ளதையடுத்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜூரோங் குழுத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குழுத்தொகுதியில் சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதிபர் தேர்தலில் நிற்பதற்காகப் பதவி விலகினால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்று இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கடந்த 2017ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, அப்படி நடந்தால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவசியமில்லை என்று அப்போதைய பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் பதிலளித்து இருந்தார்.