இல்லத்தரசி லிம் சொக் எங், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரின் பரேட்டில் உள்ள 'பாப்புலர்' புத்தகக் கடைக்குச் சென்று சமையல் புத்தகங்கள், எழுதுபொருள்கள் போன்றவற்றை அவ்வப்போது வாங்குவார்.
அந்தக் கடை பற்றி அவருக்குப் பல இனிமையான நினைவுகள் உள்ளன. அவர் தம் இரண்டு மகன்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பாடப் புத்தகங்களை வாங்குவதற்காக அவர்களை அங்கு அழைத்துச் செல்வார். இப்போது அவருடைய மகன்கள் தங்கள் 40களில் உள்ளனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த மரின் பரேட் பாப்புலர் கடை, ஜூன் 18ஆம் தேதி மூடப்படவிருக்கிறது.
"இங்கு வந்தபோதுதான் கடை மூடப்படவிருப்பதை அறிந்தேன். அதனால் எனக்கு மனவருத்தமாக இருக்கிறது," என்று 69 வயதான திருவாட்டி லிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
நேற்றுக் காலை கடை திறக்கப்படுவதற்கு முன்னர் அதன் நுழைவாயிலில் நின்றுகொண்டு இருந்த 20 வாடிக்கையாளர்களில், ஜூ சியட்டில் வசிக்கும் திருவாட்டி லிம்மும் ஒருவர்.
வாடிக்கையாளர்கள் தங்கள் நினைவுகளை ஒரு தாளில் எழுதி, கடையின் சுவரில் ஒட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஜூன் 18ஆம் தேதிவரை இறுதிக்கட்ட விற்பனை நடைபெறும் என்றும் அதில் சில பொருள்களுக்கு 90 விழுக்காடு வரை கட்டணக் கழிவு இருக்கும் என்றும் ஜூன் 2ஆம் தேதி பாப்புலர் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
புத்தகங்களுடன் தின்பண்டங்கள், தகவல் தொழில்நுட்பப் பொருள்கள் போன்றவையும் அந்தக் கடையில் விற்கப்படுகின்றன.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் வசிக்காதவர்களும் அந்தக் கடைக்குச் சென்றுள்ளனர்.
அண்மை ஆண்டுகளில் பாப்புலர் அதன் கடைகளில் சிலவற்றை மூடியுள்ளது. 2019ஆம் ஆண்டில் தாம்சன் பிளாசாவில் ஒன்றும் 2021ஆம் ஆண்டில் ஐஎம்எம் கடைத்தொகுதியில் ஒன்றும் மூடப்பட்டன.
இன்று தீவு முழுவதும் 28 கடைகள் உள்ளதாக பாப்புலர் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


