வெப்பமான வானிலையில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் அதிகாரபூர்வ வழிகாட்டி ஒன்று வரும் வாரங்களில் வெளியிடப்படும்.
பருவநிலை மாற்றத்துடன் கூடிய ‘எல் நினோ’ வானிலை விளைவால் வெப்பம் கடுமையாவதற்கு சிங்கப்பூர் தயாராகி வருகிறது.
வெப்பத் தாக்கம் குறித்து ஆலோசனை வழங்கும் அந்த வழிகாட்டி, மக்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கு எவ்வாறு திட்டமிடலாம், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வானிலையைப் பொறுத்து வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட என்ன மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்பனவற்றை விவரிக்கும்.
நீடித்த நிலைத்தன்மையுடைய உலக வளங்கள் குறித்து நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இந்த விவரங்களைப் பகிர்ந்தார்.
இந்த வழிகாட்டி குறித்த மேல்விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்றார் அவர்.
“அதிக வெப்ப பாதிப்பு காரணமாக காயங்களும் உயிரிழப்பும் ஏற்படும் சாத்தியம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
அதிக வெப்பநிலையால் மின்தடை, தண்ணீர் பற்றாக்குறை முன்பைவிட அடிக்கடி ஏற்படக்கூடும் என்பதை திருவாட்டி ஃபூ சுட்டினார்.
“சமுதாய, பொருளியல் நடவடிக்கைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்சாதன, தண்ணீர் சுத்திகரிப்புச் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின்சாரத் தேவையையும் அதிகரிக்கும்,” என்று அவர் சொன்னார்.