ஹோட்டல் அறை ஒன்றில் சிறப்புத் தேவையுடைய 19 வயது இளையரைத் துன்புறுத்திய குழுவில் இடம்பெற்றதை பதின்ம வயதுப் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதிக்கும் 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இளையரைப் பலவாறாகத் துன்புறுத்தினர்.
அப்பெண் தண்ணீரைக் கொதிக்க வைத்ததாகவும் உடன் இருந்த முகம்மது ஷஃபக்ரி முகம்மது ஃபைஸால் என்பவர் அதை இளையரின் முதுகில் ஊற்றியதாகவும் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட இளையர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவர் பத்து நாள்கள் சிகிச்சை பெற்றார்.
திங்கட்கிழமையன்று குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு சென்ற வாரம் 18 வயது பூர்த்தியானது.
தாக்குதல், போதைப்பொருள் உட்கொண்டது என இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இளையரைத் தாக்கியபோது அவருக்கு வயது 16.
போதைப்பொருள் பயன்படுத்தியபோது 17 வயது.
எனவே சிறார், இளையர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவரது பெயரை வெளியிட அனுமதி இல்லை.
22 வயதாகும் ஷஃபக்ரிக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, தாக்குதல், போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை தொடர்பில் சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இளையரைத் துன்புறுத்திய குழுவைச் சேர்ந்த புத்ரி நுராமிரா அயிஷா ரோஸ்லிக்கு சென்ற ஆண்டு செப்டம்பரில் குறைந்தது ஓராண்டுக்கான சீர்திருத்தப் பயிற்சிக்கு உத்தரவிடப்பட்டது.
குற்றச்செயலின்போது 16 வயது நிரம்பிய மற்றொரு பெண்ணுக்கு 2022 ஜூலையில் குறைந்தது ஓராண்டுக்கான சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது.
ஹோட்டல் அறையில் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், இளையர்மீது வெந்நீர் ஊற்றியது மட்டுமன்றி அவரை எட்டி உதைத்தும் குப்பை முறத்தால் அடித்தும் கன்னத்தில் அறைந்தும் மூவர் தாக்கினர்.
சமூக ஊடகத்தில் பாதிக்கப்பட்டவரின் படத்தைப் பார்த்த அவரது சகோதரி காவல்துறையில் புகாரளித்ததைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அவர் மீட்கப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு ஜூலை 19ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.