கிராஞ்சியில் அமைந்துள்ள சிங்கப்பூர் பந்தயக் கழகத்தில் 700க்கும் மேற்பட்ட குதிரைகளுடன் 100க்கும் மேற்பட்ட பூனைகளும் வசிக்கின்றன.
இந்நிலையில் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் குதிரைப் பந்தயத் திடல் மூடப்படும் என்ற செய்தியை அறிந்து அங்குள்ள ஊழியர்களும் பந்தயப் பயிற்றுவிப்பாளர்களும் நிச்சயமற்ற சூழலில் சிக்கியிருக்க இப்பூனைகளின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குதிரைகளுடன் வேலைபார்க்கும் பலரும் பூனைகளைத் தினமும் செல்லமாகக் கொஞ்சுவதுண்டு. ஊழியர்கள் தங்களின் நிலையை எண்ணிக் கவலைப்படுவதற்கு இடையே குதிரைகளையும் பூனைகளையும் பற்றி வேறு கவலைப்பட வேண்டியுள்ளது என்றனர் ஊழியர்கள் சிலர்.
பூனைகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளில் பன்மடங்காகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குதிரைப் பந்தயத் திடல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆறு பூனைகளை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தத்தெடுத்துக்கொண்டதாக அறியப்படுகிறது.