அமெரிக்கா, சீனா உள்பட ஒவ்வொரு நாட்டின் நலனையும் கருத்தில்கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் ஒரு புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் வளர்ச்சிக்குத் துணைபுரிவதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்து நிலைத்திருக்கக்கூடிய மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கும் நாடுகள் கூட்டாகச் செயல்பட மூன்று அம்சங்கள் உள்ளன.
மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 'சைஸின் ஏஷிய நியூ விஷன்' கருத்தரங்கில் திரு ஹெங் இவ்வாறு கூறியிருந்தார்.
முதலில், வர்த்தக வளர்ச்சியையும் முதலீட்டையும் ஊக்குவிக்க ஆசியாவும் மற்ற உலக நாடுகளும் வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறைகள் அடிப்படையிலான கட்டமைப்பு ஒன்றைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும்.
தடையற்ற வர்த்தகமும் மேம்பட்ட பொருளியல் ஒருங்கிணைப்பும் தொடர்ந்து நாடுகளையும் மக்களையும் மேம்படுத்தும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம் என்று பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார். சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன் ஆசியான் கொண்டுள்ள தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் அனைத்துத் தரப்புகளுக்கும் அனுகூலங்களை ஏற்படுத்தி, உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
இரண்டாவதாக, பொருளியல் மேம்பாட்டையும் புத்தாக்கத்தையும் விரைவுபடுத்த, உலகம் முழுவதும் மேலும் சுமூகமான நிதிவளங்களை ஊக்குவிக்குமாறு திரு ஹெங் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மூன்றாவதாக, பருவநிலை மாற்றம், கொள்ளைநோய்கள், மூப்படையும் மக்கள்தொகை, நாள்பட்ட நோய்களால் ஏற்படும் சுமை போன்ற பொதுவான சவால்களைச் சமாளிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
"வர்த்தகம் எப்படி மில்லியன்கணக்கானோரைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறதோ, நமது மக்கள்தொகை, உலகம், மேம்பட்ட வாழ்க்கை, வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு அறிவியலும் தொழில்நுட்பமுமே அடுத்த முக்கியத் திறவுகோல்", என்றார் திரு ஹெங்.
உலகின் மிகப் பெரிய பொருளியல்களான அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் தலைமைத்துவம் அனைவருக்குமான சவால்களைச் சமாளிப்பதற்கு முக்கியம். அப்போதுதான் பயனுள்ள முன்னேற்றங்களைக் காணமுடியும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.

