வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), புதிய வீடுகளுக்குக் காத்திருக்கும் குடும்பத்தினருக்கான இடைக்கால வாடகை வீடுகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இருக்கிறது. அடுத்த ஈராண்டுகளில் 4,000 தற்காலிக வாடகை வீடுகள் ஒதுக்கப்படும். தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன் நேற்று இத்தகவலை வெளியிட்டார்.
'பிபிஎச்எஸ்' எனப்படும் பெற்றோருக்கு அருகே வீடு வாங்க விரும்புவோருக்கான திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை தொடர்பில் வகுக்கப்பட்ட இலக்கை வீவக எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2021ல் அத்தகைய 800 வீடுகள் விற்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,800க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 2,000 வீடுகள் அவ்வாறு ஒதுக்கப்படும் என்றார் திருவாட்டி சிம்.
பொது வீடமைப்புக்கு அதிகரிக்கும் தேவையை ஈடுகட்ட வீவக மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளன என்றார் திருவாட்டி சிம்.
விற்பனைக்கு விடும் வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், தாமதம் அடைந்த 'பிடிஓ' திட்டங்களை விரைந்து முடித்தல் போன்றவற்றை அவர் சுட்டினார்.
அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் மூன்று அம்சங்கள் குறித்து திருவாட்டி சிம் குறிப்பிட்டார்.
முதன்மை வட்டார வீடமைப்புத் திட்டம், சமூகப் பராமரிப்பு அடுக்குமாடிக் குடியிருப்புகள், குடியிருப்புப் பேட்டைகளை முதிர்ச்சி அடைந்தவை, முதிர்ச்சி அடையாதவை என்று பகுக்கும் முறையை மறுஆய்வு செய்தல் ஆகியவற்றை மூத்த துணையமைச்சர் சுட்டினார்.
அரசாங்கம் தற்போது பொது வீடமைப்பை கட்டுப்படியான விலையிலும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையிலும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. மறுஆய்வு அரசாங்கத்தின் கொள்கையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். விரைவில் அதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று திருவாட்டி சிம் தமது உரையில் குறிப்பிட்டார்.

