முன்னாள் பள்ளிக் கட்டொழுங்கு ஆசிரியர் தம்முடைய மாணவர்கள், உடன் பணியாற்றிவர்கள் உட்பட மொத்தம் 170 பேரின் பாவாடைக்குள் காணொளி எடுத்த குற்றத்திற்காக நேற்று அவருக்கு 10 மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குறைந்தது 47 பேரை அந்த 50 வயது ஆடவர் குறிவைத்ததாக அறியப்படுகிறது.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த ஆடவர், 2015ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குற்றம் புரிந்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தைக் காக்கும் நோக்கில் குற்றம் புரிந்த ஆடவரின் பெயரும் அவர் பணியாற்றிய பள்ளியின் பெயரும் வெளியிடப்படவில்லை.
குற்றம் புரிந்த காலகட்டத்தில் ஆடவர் கடுமையான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற மனநலக் கழக அறிக்கையைத் தாம் கருத்தில்கொண்டதாக மாவட்ட நீதிபதி பிரென்டா டான் தண்டனை விதிப்புக்கு முன் தெரிவித்தார்.
தண்டனைக் காலத்தின்போது கட்டாய சிகிச்சை ஆணையை நிறைவேற்ற ஆடவர் தகுதியுடையவர் என்று கண்டறியப்பட்டபோதும் குற்றம் புரிவதைத் தவிர்க்கும் ஆற்றலும் ஆடவருக்கு இருந்ததாக அறிக்கை கூறியது. இதனால் ஆடவருக்கு நீதிபதி சிறைத் தண்டனை விதித்தார். இதையடுத்து சிறைத்தண்டனைக்கு எதிராக ஆடவர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார். ஆடவரை $15,000 பிணையில் விடுவிக்க நீதிபதி ஆணையிட்டார்.
ஆடவருடன் பணியாற்றிய பெண் ஆசிரியர் ஒருவர், அவர் பாவாடைக்குள் காணொளிகள் எடுத்திருக்கக்கூடும் என்று சந்தேகித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து ஆடவரின் குற்றங்கள் அம்பலமாகின.

