ஜூரோங் துறைமுக எண்ணெய்க் கப்பல் முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் நேற்றுக் காலை தீ மூண்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நேற்றுக் காலை 7.30 மணிக்கு தீச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது. இந்தோனீசியாவில் பதிவான 'ரோசா டினி' எண்ணெய்க் கப்பலின் முன்பகுதியில் புகை தென்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
தீயை அணைக்க, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளோடு ஆணையத்தின் சுற்றுக்காவல் படகும் முனையத்தின் நெருக்கடி நேர நடவடிக்கைப் பிரிவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இரண்டு மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. அக்கப்பலில் இருந்தோர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
முனையத்தில் உள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கோ அணைகரைகளுக்கோ எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை. அம்முனையம் சுத்தமான பெட்ரோலியப் பொருள்களையும் ரசாயனங்களையும் சேமித்து, கையாள்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் உள்ள அணைகரைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. மற்றொரு கப்பல் நங்கூரமிடும் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது.
தீச்சம்பவத்தால் துறைமுகச் செயல்பாடுகளோ கப்பல் போக்குவரத்தோ பாதிக்கப்படவில்லை.

