உயர் நீதிமன்ற நீதிபதியான சீ கீ ஊன், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் முதல் தேதியில் இருந்து அவர் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
நீதித்துறை ஆணையர்களான கோ யிஹான் மற்றும் தே ஹுவீ ஹுவீ, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக அக்டோபர் முதல் தேதியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
நீதித்துறை ஆணையர் தே, அக்டோபர் முதல் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு குடும்ப நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கவுள்ளார். நீதிபதி டெபி ஓங் சியூ லிங்கிடம் இருந்து அவர் இப்பொறுப்பை ஏற்கிறார்.
மூன்று மூத்த நீதிபதிகள் அதிபர் ஹலிமா யாக்கோப்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதி டான் சியோங் தாய் (ஜூன் 22ஆம் தேதி பொறுப்பேற்கிறார்), நீதிபதி ஜூடித் பிரகாஷ் (2024 ஜனவரி 2ஆம் தேதி பொறுப்பேற்கிறார்), நீதிபதி லீ சியூ கின் (2024 ஜனவரி 30ஆம் தேதி பொறுப்பேற்கிறார்) ஆகியோர் அந்த மூவர்.
அவர்கள் மூவரும் 2027 ஜனவரி 4ஆம் தேதிவரை மூத்த நீதிபதிகளாக பணியாற்றவுள்ளனர்.
இதற்கிடையே, திரு அலெக்ஸ் வோங் லி கோக், உச்ச நீதிமன்ற நீதித்துறை ஆணையராக ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து ஈராண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி சூ ஹான் டெக், உயர் நீதிமன்ற நீதிபதியாக 2024 பிப்ரவரி 21ஆம் தேதியில் இருந்து ஈராண்டுகளுக்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 2019 பிப்ரவரி 20ஆம் தேதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது இது நான்காவது முறை.

