ஆடவர் ஒருவர் அவரது இரண்டு பிள்ளைகளும் முன்னாள் மனைவியுடன் தங்கியிருந்தபோது தமது பிள்ளைகளின் பராமரிப்பு தொகையாக மாதம் $2,640 முன்னாள் மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்பொழுது அந்த இரண்டு பிள்ளைகளும் தந்தையுடனே தங்கியிருப்பது என வந்துவிட்டனர். இந்நிலையில், தான் முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் கொடுத்து வந்த $2,640ஐ அவர் இனி தனக்குக் கொடுக்க வேண்டும் என்று அந்த ஆடவர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஏட்ரியன் சியோங், குழந்தைகளின் பராமரிப்புக்காக முன்னாள் மனைவி தமது முன்னாள் கணவருக்கு மாதம் $1,000 கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தம்பதியரின் மணவாழ்க்கை 2018ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்பொழுது அவர்களின் இரண்டு பிள்ளைகளும் தங்கள் தாயாருடன் இருப்பதென முடிவெடுத்தனர்.
பின்னர், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த இரு பிள்ளைகளும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு தந்தையிடம் வந்தனர்.
அதைத் தொடர்ந்து தான் முன்னாள் மனைவியிடம் பிள்ளைகளை பராமரிக்க கொடுத்து வந்த தொகையை இனி முன்னாள் மனைவி தமக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால், தரகுத் தொகை அடிப்படையில் தமக்குக் கிடைக்கும் வருமானம் சராசரியாக $3,000 மட்டுமே என நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி தெரிவித்தார். இதனால், தம்மால் மாதம் $790, அதாவது அவரது சராசரி மாத வருமானத்தில் கால் பங்குதான் தர முடியும் என்று அவர் வாதிட்டார்.
அவர் தான் வழக்கமாக பார்த்து வந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் தற்பொழுது நிதி ஆலோசகராக பணிபுரிவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தான் நல்ல வருமானம் ஈட்டி வந்த காலத்தில் பிள்ளைகளின் செலவுகளை சமமாக பங்கிட்டு கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் தம்மீது முன்னாள் கணவர் தொடுத்த புகாரால் தான் முந்தைய வேலையை இழந்ததாகக் கூறினார்.

