சிங்கப்பூரில் ஊழியர் தேவை குறைந்து வருவதாக நேற்று வெளியிடப்பட்ட அண்மைய சந்தைத் தரவுகள் தெரிவித்துள்ளன. மேலும் பொருளியல் நிச்சயமற்றதன்மை, உலகளாவிய சிரமங்களை கருத்தில்கொண்டு வேலைச் சந்தை மேலும் சிக்கலாகும் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மொத்த வேலைவாய்ப்புகள் மெதுவான வேகத்தில் விரிவடைந்தன. ஆட்குறைப்பு அதிகரித்தது. வேலை காலியிடங்கள் இன்னும் அதிகமாக இருந்தபோதிலும் மனிதவள அமைச்சின் இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஊழியர் சந்தை அறிக்கையில் ஊழியர் தேவை தொடர்ந்து நான்காவது காலாண்டாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 2,990ஆக இருந்து ஆட்குறைப்பு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக சென்ற காலாண்டில் 3,820 ஆக உயர்ந்தது.
எனினும், இறுக்கமான வேலைச் சந்தையை எடுத்துக்காட்டும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட 71.7 விழுக்காடு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஆறு மாதங்களுக்குள் வேலை தேட முடிந்தது.
வேலையின்மை விகிதமும் குறைவாகவே இருந்தது.
பணிநீக்கம் முக்கியமாக மின்னியல் உற்பத்தி (670 முதல் 1,190 வரை), தகவல் தொடர்பு துறை (370 முதல் 560 வரை) நிதிச் சேவைகள் (260 முதல் 540 வரை) போன்ற வெளிநாடுகள் சார்ந்த துறைகளில் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரில் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 33,000 உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து ஆறாவது காலாண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது. இதில் இல்லப் பணிப்பெண்கள் சேர்க்கப்படவில்லை.
நிதிச் சேவைகள், தொழில்சார் சேவைகள், சுகாதாரம், சமூக சேவைகள் ஆகிய துறை களின் வளர்ச்சியால் வேலைவாய்ப்புப் பெற்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது.
மீதமுள்ள 30,200 பேர் கட்டுமானம், உற்பத்தித் தொழில்களில் வேலைபெற்றுள்ள குடியுரிமை இல்லாத ஊழியர்கள். குடியுரிமை இல்லாதோர் வேலைவாய்ப்பு எண்ணிக்கை கொவிட்-19 பரவலுக்கு முந்திய நிலையை தாண்டியுள்ளது இதுவே முதல்முறை.
எனினும், சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பின் அளவு, தொற்றுநோய் பரவலுக்கு முந்தைய நிலையைவிட 3.8% கூடியிருந்தாலும், முந்தைய காலாண்டின் 43,500 அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இந்தக் காலாண்டின் வளர்ச்சி மிதமானது.
ஊழியர் தேவை குறைவதற்கான அறிகுறிகளும் இருந்தன.
வேலை வாய்ப்புகள் நான்காவது காலாண்டாக மார்ச் மாதத்தில் 99,600 குறைந்தன.
எனினும், சில்லறை விற்பனை, உணவு, பான சேவைத்துறைகளில் குடியுரிமை இல்லாதோருக்கான வேலைவாய்ப்பு, தொற்றுநோய் பரவலுக்கு முந்திய நிலையை இன்னும் எட்டாததால் உயர்வாகவே இருந்தது.
வேலையில்லாதோர், காலி இடங்களுக்கான விகிதாசாரம் தொடர்ந்து 2.28 (100 நபர்களுக்கு 228 வேலைகள்) ஆக உள்ளது. ஆனால் கடந்த 2022 டிசம்பரில் 2.33 ஆக இருந்த இந்த விகிதாசாரம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் குறைந்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமும் (1.8%) சிங்கப்பூர்வாசிகளின் நீண்ட கால வேலையின்மை விகிதமும் (0.6%) இந்த ஆண்டு மார்ச்சில் குறைவாகவே இருந்தது.
சிங்கப்பூரில், நீண்டகால வேலையின்மை என்பது பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள் 25 வாரங்கள், கிட்டத்தட்ட 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல், வேலையில்லாமல் இருப்பது என வரையறுக்கப்படுகிறது. கல்வி ஒரு வேலைவாய்ப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வயது மற்றும் கல்விப் பிரிவுகளில், சிங்கப்பூரர்கள், நிரந்தவாசிகளுக்கான வேலையின்மை விகிதம் குறைவாகவே உள்ளது அல்லது முன்னேற்றம் கண்டுள்ளது.
வெளிப்புறத் தேவை, உலகப் பொருளியலைக் கருத்தில்கொண்டு, வேலைவாய்ப்பு வளர்ச்சி மேலும் மிதமடையும் என்று மனிதவள அமைச்சு கூறியது.