மியன்மார் பணிப்பெண் பியாங் ங்காய் டோனை தனது மகளுடன் சேர்ந்து சித்திரவதை செய்து மரணத்துக்குக் காரணமாக இருந்த மாது கண்காணிப்பு கேமரா படங்களை மறைக்க முயன்றதாக ஒப்புக்கொண்டார்.
பீஷான் வீட்டில் குடும்பத்தினர் பொருத்திய கேமராவில் பதிவாகியிருந்த துன்புறுத்தலுக்கு ஆதாரமான படங்களை மறைக்க தனது மருமகன் கெவின் செல்வத்தை தூண்டிய ஒரு குற்றச்சாட்டை 64 வயதான பிரேமா எஸ். நாராயணசாமி ஒப்புக்கொண்டார். அவர்கள் வீட்டில் உள்ள ‘சிசிடிவி’இலிருந்து ‘ஹார்ட் டிஸ்க் டிரைவை’ அகற்றுமாறு கெவின் செல்வத்திடம் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் காவல்துறை அதிகாரியான செல்வம், இந்த துன்புறுத்தல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு கிறார். அவரது வழக்கு ஜூலை மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2015 மே 28ஆம் தேதி அக்குடும்பத்தில் வேலை செய்யத் தொடங்கியபோது 39 கிலோ இருந்த பியாங், 2016 ஜூலை 26ஆம் தேதி உயிரிழிந்தபோது 24 கிலோவே இருந்தார்.
ஏற்கெனவே பட்டினி போடப்பட்டிருந்த 24 வயது பெண், பிரேமாவாலும் அவரது மகள் 41 வயது மகள் காயத்திரி முருகையனாலும் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களிலிருந்து மீளவில்லை.
பணிப்பெண்ணை வேண்டுமென்றே காயமேற்படுத்திய 47 குற்றச்சாட்டுகளையும் தாக்க முயன்ற ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட பிரேமாவுக்கு ஜனவரி மாதம் 14 ஆண்டுசிறை விதிக்கப்பட்டது.
பிரேமா முதலில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார். பின்னர் அவர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு நீக்கப்பட்டது. ஆனால் அக்குற்றச்செயலிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை.
செல்வத்திடமிருந்து விவாகரத்து பெற்ற காயத்திரிக்கு 2021 ஜூன் 22ஆம் தேதி 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2016 ஜூனுக்கும் ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் பீஷானில் உள்ள அவர்களது மூவறை அடுக்குமாடு வீட்டில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பதிவான படங்கள், பிரேமா பாதிக்கப்பட்ட பெண்ணை எட்டி உதைப்பதையும், தரையில் இருந்து அவரைத் தலைமுடியைப் பிடித்து மேலே இழுத்து, தலையை வலுக்கட்டாயமாக வேகமாக ஆட்டுவதையும் காட்டின. பியாங்கை மூங்கில் கம்பு, வெட்டும் பலகை போன்றவற்றால் அவர் அடித்துள்ளார்.
கடைசி 12 நாள்கள், இரவில் பிரேமா கட்டிலில் படுத்திருந்த அதே அறையில் தரையில் தூங்கிய அப்பெண் சன்னல் கம்பியுடன் கட்டி வைக்கப்பட்டிருந்தார்.
2016 ஜூலை 25ஆம் தேதி இரவு மிகவும் மெதுவாக சலவை செய்ததற்காக பணிப்பெண்ணை காயத்திரியும் பிரேமாவும் தாக்கியுள்ளனர். மறுநாள் காலையில் காயத்திரி அவரது கழுத்தை நெரித்துள்ளார். சில மணி நேரம் கழித்து, அவர் அந்த வீட்டில் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார்.
வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா துன்புறுத்தல் காட்சிகளைப் பதிவு செய்திருக்கும் என்பது பிரேமாவுக்கு தெரியும்.
அந்தப் படங்களை காவல்துறையினர் பெறுவதைக் தடுக்கும் முயற்சியாக, கேமராவில் இருந்து ரெக்கார்டரை கழற்றி தன்னிடம் தருமாறு செல்வத்திடம் கூறினார். பிறகு அதை வீட்டுக்கு வந்த தனது மருமகள் இசபெல்லாவின் பையில் மறைத்து வைத்தார்.
இசபெல்லா அதன் முக்கியத்துவத்தை அறிந்திராத நிலையில், “அதை ஏதாவது செய்,” என்று பிரேமா கூறினார். இசபெல்லா அதனை தனது கணவரிடம் கொடுத்தார். அவர் அதை நண்பரிடம் கொடுத்தார். புலாயாய்வுத் துறையினர் அவர்களது வீட்டுக்குச் சென்றபோது இசபெல்லாவும் அவரது கணவரும் அதை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
துணை அரசு வழக்கறிஞர் சீன் தே பிரேமாவுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கோரினார். இறுதியில் மரணத்தை ஏற்படுத்திய மிகக் கொடூரமான பணிப்பெண் துன்புறுத்தல் வழக்குகளில் ஒன்றான இதில் ஆதாரத்தை மறைக்க முயன்றுள்ளார் என்று அவர் கூறினார்.
தீர்ப்பு ஜூன் 26ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.