தான் தொடர்புடைய விபத்துக்காக தனது தந்தையைப் பொறுப்பேற்க அனுமதித்த பெண்ணுக்கு 17 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த காரில் உள்ள கேமரா மூலம் அவரது பொய் அம்பலமானது.
27 வயதான ஆட்ரி ஓங் ஹூய் லிங் நீதியின் போக்கை திசை திருப்பியது உட்பட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கவனக்குறைவான செயலால் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, சிறையிலிருந்து வெளிவரும் நாளிலிருந்து இரண்டு ஆண்டு களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு ஓங் தடைவிதிக்கப்பட்டுள்ளார்.
அவரது வழக்கறிஞர் திரு. எஸ்.எஸ்.தில்லன், அவரது தந்தை, தந்தை பாசத்தில் செயல்பட்டதாகக் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள டேவிட் ஓங், நீதியின் போக்கை திசை திருப்புவது உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 57 வயதான அவர் புதன்கிழமை தனது மகளுடன் நீதிமன்றத்தில் காணப்பட்டார்.
சம்பவத்தின்போது கிராப் வாடகை வண்டி ஓட்டுநராகப் பணிபுரிந்த தந்தை, 2019ஆம் ஆண்டு தெம்பனிசில் நடந்த விபத்துக்குப் பிறகு ஐந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி, செல்லுபடியாகக் கூடிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலும், தனது தந்தை வேலைக்காக வாடகைக்கு எடுத்த காரை ஓங் ஓட்டினார். டேவிட் ஓங்கும் அவருடன் காரில் இருந்தார்

