தஞ்சோங் பகார் வட்டாரத்தில் இருந்த ‘ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ்’ கட்டடத்தை நேற்று முன்தினம் இடிக்கும்போது ஏற்பட்ட விபத்துக்கு கட்டுமான, பொறியியல் நிறுவனங்களான ‘வோ ஹப்’, ‘அய்க் சுன் டெமாலிஷன் அண்ட் இஞ்சினியரிங்’ ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் விளக்கம் தரவேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகளுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
சம்பவத்தில் 10 மீட்டர் நீளமும் 3.8 மீட்டர் உயரமும் கொண்ட கான்கிரீட் சுவர் சாலையில் இடிந்து விழுந்து 20 வயது ஊழியர் மாண்டார்.
இத்தகைய ஒவ்வொரு சம்பவமும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை தொடர்பில் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பதை நினைவூட்டுவதாக மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“வேலையிட மரணம், காயமடைதல் தொடர்பில் நடப்பில் இருந்த எட்டு மாத உயர் பாதுகாப்பு நிலையில் இருந்து வெளிவந்தாலும் விழிப்பு நிலையைத் தொடர்வது அவசியம்,” என்றார் அவர்.
‘வோ ஹப்’ நிறுவனம் விபத்து நடந்த இடத்தில் செயல்படுகிறது.
‘அய்க் சுன்’ நிறுவனம் மாண்ட ஊழியர் வினோத் குமாரை அங்கு பணியில் ஈடுபடுத்தியது. விபத்தை அடுத்து 2 மீட்டர் ஆழத்தில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட அவரை மீட்க ஏறத்தாழ ஆறு மணி நேரம் பிடித்தது.
‘அய்க் சுன்’ நிறுவனம் வேலையிடக் காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் வினோத்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் என்று திரு ஸாக்கி கூறினார்.
வினோத்குமாரின் சக ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விரைவான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் வலி யுறுத்தியுள்ளார்.