வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டை விற்று அதன்மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து முன்னாள் மனைவிக்குப் பராமரிப்புத் தொகை செலுத்தும்படி, நொடித்துப்போனதாக அறிவிக்கப்பட்ட ஆடவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்விருவருக்கும் இடையே திருமணச் சொத்துகள் பிரிக்கப்படுவதற்கான வழக்கில் மாவட்ட நீதிபதி கெவின் ஹோ நேற்று அவ்வாறு தீர்ப்பளித்தார்.
நொடிப்புநிலை விவகாரத்தால் சிரமம் ஏற்பட்டிருந்தாலும், பிரிக்கப்படும் சொத்துகளில் திருமணத்திற்குப் பின் வாங்கப்படும் வீடு அடங்கியிருப்பதற்கு அனுமதி உள்ளது.
சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகச் சொத்துகள் பொது வீடமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், அவை நொடிப்புநிலைச் சட்டத்தின் செயல்பாடுகளிலிருந்து பொதுவாக விலக்கப்படுகின்றன.
எனவே வீடு விற்கப்படவேண்டும் என்றும் அதன்மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து முன்னாள் மனைவிக்கு $100,000 தரவேண்டும் என்றும் ஆடவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு, அவரது மத்திய சேமநிதிக் கணக்கிலிருந்து $219,000 தொகை முன்னாள் மனைவியின் கணக்கிற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக அந்த ஆடவரின் மாத வருமானம் ஏறக்குறைய $2,000 என்று மதிப்பிடப்பட்டது.
அதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்கு மாதம் $300ஐ முன்னாள் மனைவிக்குக் கொடுக்குமாறு ஆடவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
12, 17 வயது நிரம்பிய அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்காக அவர் தன் முன்னாள் மனைவிக்கு மாதத்திற்கு மேலும் $800 கொடுக்க வேண்டும்.
2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அத்தம்பதி, 2022ஆம் ஆண்டில் மணவிலக்குப் பெற நேரிட்டது. பிள்ளைகளைப் பராமரிப்பதன் தொடர்பில் கூட்டுப் பொறுப்பு ஏற்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இருப்பினும், திருமணமான பிறகு வாங்கிய சொத்துகளைப் பிரிப்பது, ஆடவர் முன்னாள் மனைவிக்கும் தமது பிள்ளைகளுக்கும் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவது ஆகியவை தொடர்பில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இவ்வழக்கில், ஆடவரின் மத்திய சேமநிதிக் கணக்கு, யுஓபி வங்கிக் கணக்கு, திருமணத்திற்குப் பிறகு இருவரும் வாங்கிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஆகியவை மட்டுமே திருமணச் சொத்துகளில் அடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் மனைவி முன்னதாக, 30 ஆண்டுகளுக்கு மாதம் $900 என்ற அடிப்படையில் ஆடவரிடமிருந்து ஒட்டுமொத்தமாக $324,000 கோரியிருந்தார்.
அது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று நீதிபதி கூறினார். அந்த மாது தனது உடல்நிலை காரணமாகத் தன்னால் பணிபுரிய முடியாது எனக் காட்டும் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தார். அவை இவ்வாண்டு மார்ச் மாதம் காலாவதியாயின.
பிள்ளைகளுக்காக மாதாமாதம் $1,650 செலவிடுவதாக மாது கூறினார். இருப்பினும், $990 தகுந்த தொகையாக இருக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அந்த மாது மேல்முறையீடு செய்துள்ளார்.