வியட்னாமைச் சேர்ந்த கேளிக்கை நிகழ்ச்சிப் படைப்பாளர் ஒருவர் விதிமீறலாக மதுபானக் கூடத்தில் வேலைபார்த்தபோது அமலாக்க நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
அதையடுத்து, 21 வயது டாங் மய் ஹுயென் டிராங், காவல்துறை அதிகாரிக்கு $100 கையூட்டு தர முயன்றதாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடந்த சம்பவத்தில் 24 வயது காவல்துறை அதிகாரி லஞ்சத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். டிராங் பின்னர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் தர முயன்றதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நேற்று ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒருவாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மதுபானக் கூடத்தில் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது யாரோ எழுப்பிய எச்சரிக்கைக் குரலைக் கேட்டு டிராங்கும் வேறு சில பெண்களும் ஓடத் தொடங்கினர்.
எனவே மூன்று அதிகாரிகள் அவர்களைத் துரத்திச் செல்ல நேரிட்டது.
வியட்னாமைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பிடிபட்ட டிராங் முதலில் $50 தாளைத் தர முயன்றார். அதிகாரி மறுக்கவே மற்றொரு $50 தாளை அவர் தர முயன்றார்.
லஞ்சம் தருவது தவறு என்று தனக்குத் தெரியும் என விசாரணையில் டிராங் ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.