சிங்கப்பூரில் தாங்கள் பார்த்து வந்த வேலையை நடுவே விட்டு விட்டு சமூக சேவைத் தொழில்துறையில் வேலையில் சேர்வோர் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருக்கிறது.
அப்படி நடுவே வாழ்க்கைத் தொழிலை மாற்றிக்கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2016 முதல் 2022 வரை 19 விழுக்காடு கூடியிருப்பதாக தேசிய சமூகச் சேவை மன்றம் தெரிவித்துள்ளது.
இடையில் சமூக சேவைத் துறையில் தன்னுடைய வாழ்க்கைத்தொழிலை மாற்றிக்கொண்டவர்களில் திரு பிரேம் முனியாண்டி, 37, என்பவர் ஒருவர்.
இவர், 2010ஆம் ஆண்டு கண் சோதனையாளராக பட்டயம் பெற்றவர். அந்த வேலை தன் விருப்பத்திற்கேற்ற வாழ்க்கைத்தொழில்தான் என்று அவர் முடிவு செய்திருந்தார்.
ஆனால், அந்தத் தொழில்துறையில் சில ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு தன்னிடம் ஊக்கம் குறைந்ததை அவர் கண்டுகொண்டார்.
"எனக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுள் இருந்த விருப்பத்தை நான் கண்டுகொண்டேன்," என்று தெரிவித்த திரு பிரேம், 2018ல் விலங்குவதை தடுப்புச் சங்கத்தில் தொண்டூழியம் செய்யத் தொடங்கினார்.
சமூகத்திற்குச் சேவையாற்றுவதில் அவர் மகிழ்ந்தார். தன் வாழ்க்கை பொருள்பொதிந்த ஒன்றாக இருப்பதை அவர் கண்டுகொண்டார்.
"மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய வேலையில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் அதற்கான சில தேர்ச்சிகளும் அறிவும் என்னிடம் இல்லை. அது எனக்கு கவலையாக இருந்தது.
"சமூக ஊழியர்களுக்கான ஒர்க்ஃபோர்ஸ் சிங்கப்பூர் வாழ்க்கைத்தொழில் மாற்றுச் செயல்திட்டத்தில் சேர்ந்தேன்," என்று அவர் தெரிவித்தார்.
அந்தச் செயல்திட்டம் நடுவில் வேலை வாழ்க்கைத்தொழிலை மேற்கொள்வோருக்குப் பயிற்சி அளித்து அவர்களைத் தகுதியுள்ள சமூக ஊழியர்களாக ஆக்குகிறது. அதன் ஒரு பகுதியாக திரு பிரேம் சமூகச் சேவையில் இரண்டாண்டு பட்டயப் படிப்பில் சேர்ந்தார்.
இப்போது அவர் சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் முழுநேர சமூக ஊழியராக உள்ளார்.

