பாதுகாப்பு இல்லம் ஒன்றில் 20 வயது மாது ஒருவர் 17 வயதுப் பெண் மீது நடத்திய தாக்குதலில் அந்தப் பெண்ணுக்கு மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த 20 வயது மாது, பதின்ம வயதுப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து அவர் தலையைப் பல முறை தரையில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் நீடித்ததாகத் தெரிகிறது.
இதில் பதின்ம வயதுப் பெண்ணின் தலைமுடி கொத்து கொத்தாக தலையிலிருந்து வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு இல்ல ஊழியர் வந்து தாக்கப்பட்ட பதின்ம வயதுப் பெண்ணை மீட்ட பின்னரே தாக்குதல் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி தாக்குதலில் ஈடுபட்ட மாது தாக்கப்பட்ட பெண் ஆகியோர் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது. இந்தத் தாக்குதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி காலை சுமார் 9.20 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மாது, பதின்ம வயதுப் பெண் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாது அந்தப் பெண்ணை தாக்கியதாகத் தெரிகிறது.
அவரை முதலில் கையால் தாக்கியும் காலால் உதைக்கவும் தொடங்கிய மாது பின்னர் அவர் தலைமுடியைப் பிடித்து அவரைத் தரையில் மோதியதாகக் கூறப்படுகிறது.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான மாது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கண்காணிப்பு ஆணை, சீர்திருத்தப் பயிற்சிக்கு அந்த மாது தகுதியுடையவரா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றம் அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.

