ஒரு காலத்தில் சிங்கப்பூரின் 'ஹாலிவுட்'டாக கருதப்பட்டது
ஒரு காலத்தில் இந்த வட்டாரத்திலேயே ஆகப்பெரிய வெளிப்புற தொலைக்காட்சி அரங்காக கருதப்பட்டு வந்த 'துவாஸ் டிவி வோர்ல்ட்'டின் எஞ்சிய பகுதி, 2024 இரண்டாம் காலாண்டிற்குள் இடிக்கப்படவுள்ளது.
6.6 ஹெக்டர் பரப்பளவில் அமைந்த இந்த இடம், எட்டு 'செட்டு'களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஐந்து செட்டுகள் பழைய சிங்கப்பூரையும் மூன்று சீனாவையும் சித்திரித்தன.
ஏறக்குறைய $35 மில்லியன் செலவில் 1990க்கும் 1992க்கும் இடையே சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் இந்த வளாகத்தைக் கட்டியது.
சிங்கப்பூர் ஆற்றைப்போல காட்டும் 215 மீட்டர் நீள நீர் காட்சியையும் இந்த வளாகம் கொண்டிருந்தது.
துவாஸ் சோதனைச் சாவடி காம்பிளெக்சுக்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் எதிர்வரும் ஒருங்கிணைந்த ரயில் சோதனை மையத்துக்கும் இடையே இந்த வளாகம் அமைந்துள்ளது.
துவாஸ் டிவி வோர்ல்ட் கட்டி முடிக்கப்பட்டபோது, கேல்டிகாட் ஹில்லில் இருந்த ஆரம்பகால சிங்கப்பூர் செட்டைவிட 40 மடங்கு பெரியதாக இருக்கும் என்று சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழக பிரதிநிதிகள் 1990ல் கூறி இருந்தனர்.
இதனால் கூடுதல் நாடகங்களைத் தயாரிக்க முடிந்தது. ஆங்கிலம், மலாய், தமிழ் நாடகங்கள் அவற்றில் அடங்கின.
பத்து ஆண்டுகால செயல்பாட்டிற்குப் பிறகு, துவாஸ் டிவி வோர்ல்டை பராமரிப்பதற்கு செலவு அதிகமானதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
1990களுக்குப் பிறகு குறைவான பழங்கால நாடகங்கள் தயாரிக்கப்பட்டது அதற்குக் காரணம்.
சிங்கப்பூர் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியம் இந்த வளாகத்தை வாடகைக்கு எடுத்து, தனது பயிற்சித் தேவைகளைப் பூர்த்திசெய்ய அதைத் தற்காலிக தளமாக மாற்றியது என்று காவல்துறை பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கடந்த வெள்ளிக்கிழமை கூறினார்.
இந்த வளாகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஏதுவாக 2009ல் அங்கு பயிற்சி முடிவுக்கு வந்ததாக அவர் சொன்னார்.
துவாஸ் டிவி வோர்ல்டின் ஏறக்குறைய 100 கட்டடங்களில் 17 மட்டுமே இப்போது உள்ளன. எஞ்சிய கட்டடப் பகுதிகள் எப்போது நீக்கப்பட்டன என்பது பற்றித் தெரியவில்லை.
செப்டம்பர் நடுவில் ஒப்பந்ததாரரை உள்துறை அமைச்சு நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து, 2024 இரண்டாம் காலாண்டுவரை இந்த வளாகத்தை இடிக்கும் பணிகள் நடைபெறும். பின்னர் இந்த இடம் சிங்கப்பூர் நில ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.

