கருணாநிதி துர்கா
ஸ்ரீ நாராயண மிஷன், சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்கத்தில் 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வசதி குறைந்த மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி, இலவச துணைப்பாட வகுப்புகள் என சமூகத்திற்குத் தொண்டாற்றிய ஸ்ரீ நாராயண மிஷன், 1979ஆம் ஆண்டு உடல்நலமில்லாத முதியோருக்கு சேவை வழங்கவும் தொடங்கியது.
இந்த அமைப்பு, தன் 75வது ஆண்டு நிறைவை இந்திய மரபுடைமை நிலையத்தில் நேற்று கொண்டாடியது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கடந்த வாரயிறுதியில் இந்திய மரபுடைமை நிலையத்தில் அமைக்கப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி, ஸ்ரீ நாராயண மிஷனின் வரலாற்றைப் பற்றியும் அடுத்த ஐந்து ஆண்டுகளின் அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள், முயற்சிகளைப் பற்றியும் விளக்குவதாக அமைந்தது.
மேலும், தொண்டூழியம் பற்றியும் சிங்கப்பூரின் அறக்கொடை சூழலில் ஸ்ரீ நாராயண மிஷன் ஆற்றும் பங்கு பற்றியும் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
“சமூக சேவை அமைப்புகள் இணைந்து பங்காளித்துவங்களை அமைத்து செயல்படுவது அவசியம். மேலும், சிங்கப்பூரில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் ஸ்ரீ நாராயண மிஷன் போன்ற அமைப்புகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன,” என்று திரு எரிக் சுவா கூறினார்.
“இங்கு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் என்னிடத்தில் எப்போதும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நிச்சயம் இந்த அமைப்பு எனது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசிக்கும் திருமதி அடைக்கலம்மாள் நடேசன், 84, கூறினார்.
“இந்த 75 ஆண்டுகளாக பொதுமக்கள் எங்கள் அமைப்பிற்கு அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தொடர்ந்து மேன்மேலும் வளர்ச்சியடைந்து சிங்கப்பூர் சமுதாயத்திற்கு பணிபுரிய ஆசைப்படுகிறோம்,” என்று ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவர் ஜெயதேவ் உன்னிதன் கூறினார்.