பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்கும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் வெளிநாடுகளில் ஓரிரு ஒப்பந்தங்களை விரைவில் கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரைத் தாண்டி தமது சேவையை விரிவாக்கம் செய்ய எஸ்எம்ஆர்டி திட்டமிடுவதாக அதன் தலைவர் சியா மூன் மிங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவிலும் புது வாய்ப்புகளைப் பெற எஸ்எம்ஆர்டி முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
முக்கியமான வெளிநாட்டுத் திட்டங்களில் மட்டும்தான் எஸ்எம்ஆர்டி கவனம் செலுத்துவதாகவும் சியா கூறினார்.
எஸ்எம்ஆர்டி ஏற்கெனவே சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நான்கு ரயில் பாதைகளில் சேவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் மெட்ரோ சேவையின் புதிய ஐந்து பாதைகளில் ஆலோசகப் பணிகளில் ஈடுபட 2021ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை வென்றது எஸ்எம்ஆர்டி.
ஜோகூர் பாரு - சிங்கப்பூர் இடையிலான பெருவிரைவுப் போக்குவரத்து முறையிலும் எஸ்எம்ஆர்டி வேலை செய்கிறது. அந்த திட்டத்தின் பணிகள் 2026ஆம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.