ஹவ்காங் அவென்யூ 3ல் புதன்கிழமை போக்குவரத்துக் காவலரின் மோட்டார்சைக்கிள் மோதி நடந்து சென்ற 58 வயது ஆடவர் ஒருவர் மாண்டுபோனார்.
அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் அதன் பின்னர் அவர் மாண்டுவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
31 வயது போக்குவரத்துக் காவலரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தார்.
ஹவ்காங் அவென்யூ 3 - கிம் சுவான் ரோடு சந்திப்பில் விபத்து நிகழ்ந்ததாகவும் மாலை 5.30 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் காவல்துறை கூறியது.
விபத்து நடந்த இடத்திற்கு இரண்டு அவசர உதவி வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் விபத்தில் சிக்கிய இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. பொதுமக்கள் அப்படங்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விசாரணை தொடர்கிறது.


