சிங்கப்பூர் வானில் வியாழக்கிழமை இரவு முக்கோண வடிவில் நிலா, செவ்வாய், வெள்ளிக் கோள்கள் தோன்றின.
இந்தக் காட்சி இரவு 7:30 மணி முதல் 9 மணிவரை வானத்தின் மேற்குப் பகுதியில் தெரிந்தது.
பொதுமக்கள் எந்த ஒரு கருவியின் துணையின்றியும் சாதாரணமாக அதனைப் பார்க்க முடிந்தது. தொலைநோக்கி கொண்டு அக்காட்சியை மேலும் தெளிவாகப் பார்க்க முடியும் என்று அறிவியல் நிலைய ஆய்வகம் தெரிவித்தது.
இதற்கு முன்னர் முக்கோண வடிவில் நிலா, செவ்வாய், வெள்ளிக் கோள்கள் கடந்த மாதம் தோன்றின.
இதுபோன்று கோள்கள் குறிப்பிட்ட வடிவங்களில் தோன்றுவது ‘கஞ்சங்ஷன்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
‘கஞ்சங்ஷன்ஸ்’ அடிக்கடி வித்தியாசமான வடிவங்களில் இடம்பெறும் என்று அறிவியல் நிலைய ஆய்வகத்தின் பேச்சாளர் கூறினார்.
இந்த நிகழ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.


