நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி ஒன்றில் நடு இரவில் நுழைந்த ஆடவர், தூங்கிக்கொண்டு இருந்த மாணவிகளைப் பார்ப்பதற்காக படுக்கை அறைகளுக்குள் போனார்.
முகம்மது ஷாரின் ஷா, 37, என்ற அந்த ஆடவர், கன்னமிட்டு நுழைந்தது தொடர்பிலான இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதோடு, $2,800 அபராதம் செலுத்தும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. அந்த ஆடவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றங்களையும் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அதற்காக 24 மாதங்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்று அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டபோது இதர 11 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
முகம்மது ஷாரின் ஷா இதே போன்ற குற்றங்களை 2016ஆம் ஆண்டிலும் செய்து தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

