தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை விநியோகம் செய்த 45 வயது சிங்கப்பூரருக்கு 24 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சிகரெட் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் செலுத்த உதவிய குற்றத்திற்காகவும் அவருக்கு நேற்று முன்தினம் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. லோ குவாங் மெங் எனப்படும் அந்த ஆடவருக்கான தண்டனை இருவகைப்படும்.
தீர்வை செலுத்தப்படாத சிகரெட் விநியோகத்திற்கு 17 மாத சிறைத் தண்டனையும் குற்றம் புரிந்ததன் மூலம் கிடைத்த பலன்களைத் தக்க வைத்துக்கொள்ள மற்றொருவருக்கு உதவியதற்காக ஏழு மாத சிறைத் தண்டனையும் அதில் அடங்கும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி சாங்கி ரோட்டில் லோ கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 1,329 பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த வேனில் அவர் அமர்ந்திருந்தார்.
சட்டவிரோத சிகரெட் விற்பனை மூலம் கிடைத்ததாக நம்பப்படும் $42,660 ரொக்கப் பணத்தை அப்போது அவர் வைத்திருந்தார்.
வேன், சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

