ஆபாசப் படங்களில் குழந்தைகள் துன்புறத்தப்படுவது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 120க்கும் அதிகமான வழக்குகளை விசாரித்துள்ளது. அப்போது அத்தகைய ஆபாசப் படங்களைத் தயாரிப்பது, விநியோகிப்பது, விளம்பரம் செய்வது, வைத்திருப்பது சட்டவிரோதமாக்கப்பட்டது.
இத்தகைய வழக்குகள் தொடர்பான விசாரணை நடத்துவதில் ஏற்படும் சவால்களைப் பற்றி காவல்துறையின் உதவி கண்காணிப்பாளர் ஜேன் சென் பகிர்ந்துகொண்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஆபாசப் படங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதன் காரணமாக குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் ஆயிரக்கணக்காண காணொளிகளையும் படங்களையும் பார்க்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஆறு மாதப் பச்சிளங் குழந்தைகளும் அடங்குவர். இதுவரை விசாரணைக்கு உட்பட்ட அனைத்துப் படங்கள், காணொளிகள் ஆகியவற்றில் இருந்த குழந்தைகள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணை நிமித்தமாக அத்தகைய காணொளிகளைக் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவை மனதளவில் பாதிப்பையும் வேதனையையும் ஏற்படுத்துவதாகவும் உதவி கண்காணிப்பாளர் ஜேன் சென் கூறினார்.
ஆனால் முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க அவற்றைப் பார்க்க வேண்டி இருப்பதாக அவர் கூறினார்.
இத்தகைய முக்கிய விசாரணை, நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரை உதவி கண்காணிப்பாளர் ஜேன் சென்னும் சிங்கப்பூர் காவல்துறையைச் சேர்ந்த சக அதிகாரிகளும் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலிஸ் கென்டோன்மண்ட் வளாகத்தில் உள்ள சைபர் கார்டியன் ஆய்வுக்கூடத்தில் கடந்த வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் உதவி கண்காணிப்பாளர் ஜேன் சென் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆய்வுக்கூடம் நாளை திறந்துவைக்கப்படும். குழந்தைகள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் ஆபாசப் படங்கள் குறித்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரிகளுக்கு அது பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.