சீனாவின் சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்டுவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வர்த்தக, முதலீட்டுச் சந்திப்பில் சிங்கப்பூர், சிச்சுவான் நிறுவனங்கள் ஆறு புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டன.
சிச்சுவானில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருப்பதை இந்த ஒத்துழைப்பு காட்டுவதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
23வது சிங்கப்பூர்-சிச்சுவான் வர்த்தக, முதலீட்டுக் குழுவின் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோது டாக்டர் டான் இதனைக் கூறினார்.
சிச்சுவான் துணை ஆளுநர் யாங் ஸிங்பிங்குடன் சேர்ந்து டாக்டர் டான் இந்தச் சந்திப்புக்கு தலைமை தாங்கினார். சிங்கப்பூர்-சிச்சுவான் பொருளியல் உறவுகளின் வலிமையையும் மீள்திறனையும் டாக்டர் டான் சுட்டினார்.
கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாத அளவாக US$2.7 பில்லியனை (S$3.65 பி.) எட்டியது. ஆண்டு அடிப்படையில் அது 38.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
மொத்தம் 737 திட்டங்களில் US$4.2 பில்லியன் முதலீடுகளைப் புரிந்ததன் மூலம், கடந்த ஆண்டு சிச்சுவானின் ஆகப்பெரிய அந்நிய முதலீட்டாளராக சிங்கப்பூர் விளங்கியது.
நிகழ்ச்சிகளுக்குக் கூட்டாக சேர்ந்து ஏற்பாடு செய்து கூடுதல் வர்த்தகப் பரிமாற்றங்களை ஏற்படுத்த, சிச்சுவான் தொழில்முனைவர் பொதுச் சங்கத்துடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபையின் சிச்சுவான் பிரதிநிதி அலுவலகம் இணக்கம் தெரிவித்தது.