சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 312 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் 16 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இரண்டு வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
ஜூன் 9க்கும் 22க்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 203 ஆண்களும் 109 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.
1,200க்கு மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதன் தொடர்பிலான விசாரணையில் அவர்கள் உதவி வருகின்றனர். மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6 மில்லியனுக்குமேல் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடன் மோசடிகள், இணையக் காதல் மோசடிகள், போலி நட்பு அழைப்புகள் தொடர்பான மோசடிகள், அரசாங்க அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்த மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள், மின்வர்த்தக மோசடிகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை வழங்குதல் ஆகியவை தொடர்பில் 312 பேரும் விசாரிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை நடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ $125,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.