ஹவ்காங்கில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீ மூண்டதைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கிட்டத்தட்ட 10 பேர் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இரவு 7.30 மணிக்குத் தீச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. புளோக் 308 ஹவ்காங் அவென்யூ 5ல் உள்ள 13வது மாடி வீட்டில் மூண்டது.
சுவாசக் கருவிகளுடன் அவ்வீட்டிற்குள் நுழைந்த தீயணைப்பாளர்கள், நீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர்.
தீயணைப்பாளர்கள் அங்கு சென்றுசேர்வதற்கு முன்பே வீட்டில் தங்கியிருந்தவர்கள் வெளியேறிவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் உள்ள மற்ற வீடுகளின் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். அதற்கு உதவிய வழிப்போக்கர் ஒருவர், புகையை சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மின்சாதனத்தில் இருந்து தீ மூண்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


